ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 15, 2014

காது காது லேது லேது

எனக்கு என் மனைவியின் மீது ரொம்ப பாசம். அவளுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னா எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். இதுவரை கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டு  இருந்தது. ஆனால் இப்ப கொஞ்ச நாளா சின்ன சின்ன குழப்பங்கள். நான் ஒண்ணு  கேட்டால் அவள் ஒன்று சொல்கிறாள். அவள் கேள்விக்கு நான் பதில் சொன்னால் ரொம்பத்தான் கோபித்து கொள்கிறாள். குழம்பிப் போனாலும் நான் பொறுமையாய் இருந்து கடைசியில் அதற்கான காரணம் கண்டுபிடித்தேன். அவளுக்கு காதில் எதோ குழப்பம். கேட்கும் சக்தி குறைந்து விட்டது என தெரிந்தது. அனால் அவளிடம் சொன்னால் வருத்தப் படுவாள். என்ன செய்வது என யோசித்து நான் மட்டும் எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்டேன்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு யோசனை சொன்னார். கேட்கும் சக்திக் குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம்.  மனைவிக்கு எவ்வளவு தூர இடைவெளியில் காது கேட்க முடிகிறது
என்பதை அறிந்து கொள்ள ஒரு டெஸ்ட் செய்ய எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

இன்றே அதை செய்ய முடிவு செய்து வீட்டுக்கு திரும்பி வந்தேன். அவள் சமயலறையில் இருந்தாள். நான் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்திற்கு சென்று அங்கிருந்து குரல் கொடுத்தேன், "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (தோராயமா ஒரு 30 அடி தொலைவு)

எதிர்பார்த்த மாதிரியே எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் அங்கிருந்து திரும்ப வீட்டு  பின்கதவுக்கு அருகில் வந்து நின்று மீண்டும் குரல் கொடுத்தேன்.
"என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா  ஒரு 20 அடி தொலைவு)

இப்பவும் எதுவும் பதில் வரவில்லை. நான் வீட்டுக்குள் வந்து பெட்ரூமில் இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 15 அடி தொலைவு).

எதுவும் பதில் வராததால் எனக்கு மிகுந்த கவலையாயிற்று. ஹாலுக்கு வந்து இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 10 அடி தொலைவு).

பதிலில்லை. நான் மனமொடிந்து போனேன். சமையலறைக் கதவருகில் சென்று பார்த்தேன்.அவள் திரும்பி நின்றபடி சமையல் செய்து கொண்டு
இருந்தாள். கதவுக்கு அருகில் நின்றபடி மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 5 அடி தொலைவு).

பட்டென்று திரும்பிப் பார்த்தவள் என்னை முறைத்து பார்த்தாள். நான் டெஸ்ட் ரிசல்ட் வந்ததில் மகிழ்வதா இல்லை கவலைப்படுவதா என குழம்பி நிற்கையில், அவள் சத்தமான குரலில், " இதோட 5 தடவ சொல்லிட்டேன், "மீன் கொழம்பு", மீன் கொழம்பு" உங்களுக்கு காது கேக்குதா இல்லையா ......?

 

வெள்ளி, அக்டோபர் 31, 2014

புது மாப்பு

 
இன்று எனது முதலிரவு. 
ரொம்ப களைப்புடன் கட்டிலில் காத்திருக்கிறேன். இரண்டு நாட்களாக 
கடுமையான அலைச்சல்.  இப்போதுதான் எல்லா வேலைகளும் முடிந்து 
உட்கார சிறிது நேரம் கிடைத்துள்ளது. தூக்கம் கண்வாசலில் தொத்திக் 
கொண்டு நிற்கிறது. மணப்பெண்ணை இன்னும் காணோம். நேரம் பன்னிரண்டு மணியை கடந்துவிட்டது.முதலிரவு என்ற நினைப்பு 
இவளுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா..? தூக்க கலக்கத்தை போக்க இரண்டு தடவை டீ குடித்து விட்டேன் 
இரண்டாவது முறை டீ கேட்டபோதே அம்மா பிளாஸ்க் கழுவுரதைப் 
பார்த்தேன். இனிமேல் டீ  கேட்டால் அதில்தான் தருவாங்க. மறுபடியும் அவுங்கள தொல்லை பண்ணகூடாது.
பால்சொம்பு ஏந்தி வரும் கொலுசு சத்தத்துக்காக மனம் ஏங்கித் தவித்தது.
"அடடே நீங்க இன்னும் தூங்கலையா..?"
என்று கெட்டபடியே அவள் அறைக்குள் நுழைந்தாள். "எங்கடீப்போயித் தொலைஞ்சே"ன்னு கேட்கத்  தோன்றியதை அப்படியே அடக்கிக் குரலை மிமிக்ரி பண்ணி மாற்றி 
"ஏம்மா இவ்வளவு லேட்டு"
என்று கனிவாக கேட்டேன்.
 "உங்க உறவுக்காரங்க எல்லாரையும் விசாரிச்சிட்டு இருந்தேன்". "கட்டின புருஷன இங்க தனியா உக்கார வச்சிட்டு உனக்கென்ன அவுங்ககிட்ட 
விசாரிப்பு வேண்டிக்கிடக்கு..?",
(இல்லீங்கோ, நான் அப்பிடி கேக்கலீங்கோ) திரும்பவும் பல்லக் கடிச்சிகிட்டு "பால் கொண்டுவரலயா...?"   
என்று என்னுடைய குரலிலேயே  பாலையும் தேனையும் சேர்த்துக்கொண்டு கேட்டேன்.
 "பாலா.?, தூங்குறதுக்கு முன்னாடி நீங்க பால் குடிப்பீங்களா.?" என்றாள். "அப்படியெல்லாம் இல்லை, முதல் இரவுன்னாலே பால் கொண்டு வரும் சீன்தான்  சினிமாவில பார்க்கிறோம், அதான் கேட்டேன்". உடனே அவள் "நான் போயி பால் இருக்கான்னு கேட்டுப்  பாக்கட்டுமா?." "மரியாதையா போயி பால் கொண்டுவாடீ" என்று சொல்ல விரும்பினாலும் மீண்டும் பல்லை கடித்துக் கொண்டு
 "பரவாயில்லை, வேண்டாம்".
அதை கேட்டதும் கேட்காததுமாய் சென்றுவிட்டாள்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நாம என்னிக்கு பால் சாப்பிட்டு 
இருக்கோம். பண்ணுறது சேல்ஸ் மேன்  வேலை. ஓயாம பிரயாணம் பண்ணி பண்ணி சாப்பிடவே நேரம் இருக்காது. அப்புறம் எங்க பால்.? சிந்தனைக்கு 
திரைசீலை விழ பால் எடுத்துக் கொண்டு அவள் வந்துவிட்டாள்.
அவள் கிளாஸ பிடித்திருக்கும் விதத்திலேயே அவளுக்கு சுடுதண்ணி 
கூட வைக்கத் தெரியாது என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.
"இந்தாங்க பால்".
பால் டம்ளரை வாங்கி அவளை ஒரு குறும்பு பார்வை பார்த்தேன்.

அவளோ அறையின் மூலையில்அலங்கோலமாக கிடந்த சூட்கேஸை
பார்த்தபடி நின்றிருந்தாள். அது அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்தது. அவள் கவனத்தை என்பக்கம் திருப்ப எண்ணி கேட்டேன். 
"ஏன் சூட்கேஸ ஒழுங்கா அடுக்கி வைக்கலை.?"
 "அடடே மறந்துட்டேங்க',
பதில் சொன்னபடியே சூட்கேஸை  நோக்கி நடந்தாள். 
"சரி சரி காலையில பாத்துக்கலாம்" ......
ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுச்சு. இனி இவள் துணிமணிகளை சூட்கேஸில் அடுக்க இன்னும் எவ்வளவு நேரமாகுமோ என்ற கவலைதான்.

 "நீங்க காலையில சீக்கிரமா எந்திரிப்பீங்களா?". 
கொஞ்சம் தர்மசங்கடமான கேள்வி கேட்டாள். நாம என்னிக்கி சீக்கிரம் எந்திரிச்சிருக்கோம். ஆனா இப்ப அந்த ரகசியத்தை அவளுக்கு சொல்ல வேண்டாம். போகப் போக அவளுக்கே புரிந்து விடும்.
 "நானா ..? எந்திரிப்பேன்..... ஆனா நாளைக்கு வேண்டாம். ரொம்ப களைப்பா  இருக்கு நல்லா தூங்கணும்"
"அம்மா அப்பா சீக்கிரமா எந்திரிப்பாங்களா..?" 
"ஆங்.. அவுங்க தினமும் சீக்கிரமா எந்திரிச்சுடுவாங்க, என்ன விஷயம்..?"
இல்ல...யாரும் எந்திரிக்கலன்னா நானும் சீக்கிரம் எந்திரிக்க வேணாமில்ல. அதான் கேட்டேன்".

மனதில் சட்டென ஒரு மின்னல் வெட்டியது. இவ பயங்கரமான ஆள்தான். 
எல்லா விஷயத்திலும் சரிக்கு சமமா இருக்க இருக்கணும்னு பார்க்கிறாள். கொஞ்சம் விட்டா என் வீட்டில் இனி மதுரை ராஜ்ஜியம் தொடங்கப் 
போவது உறுதி. முதலிரவிலேயே விட்டுக் கொடுக்க எனக்கு 
விருப்பமில்லை. கொஞ்சம் கண்டிப்பு காட்ட நினைத்தேன்.

 "இதோபார், நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரிஞ்சுக்கோ", என்று கொஞ்சம் அதட்டலுடன் சொன்னேன். அதைக் கேட்டு அவள் சத்தமாக சிரித்தபடி,
"போங்க, சும்மா தமாஷ் பண்ணாதீங்க, உங்கள பாத்தா அப்படியெல்லாம் தெரியல"
ஊசி பட்டாசு வெடிச்ச மாதிரி உங்களுக்கு ஏதாவது சத்தம் கேட்டுச்சா...? ஒண்ணுமில்ல எங்கிட்ட இருந்த ஒரே ஆயுதமும் நமத்து போன கவலையில் என் மனசு வெடிச்ச சத்தம்தான் அது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,
 "என் முகத்தப் பார்த்து எடை போடாத, நான் ஒரு பாம்ப அடிச்சு கொன்னிருக்கேன்,தெரியுமா?", 
முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் சொன்னேன். உடனே அவள்
 "இதென்ன பெரிய விஷயமா.? எங்க அப்பத்தா கூடத்தான், கைத்தடிய வச்சு அடிச்சு ஒரு பெரிய பாம்பை கொன்னிருக்காங்க, தெரியுமா.?"

இவ என்ன தலைய தூக்க விடமாட்டான்னு தோன்றியதால், நான் வம்பு வளர்க்க விரும்பாமல் சொன்னேன்,
"சரி சரி படுக்கலாம்".
"ஆமாங்க நானே சொல்லணும்னு  நெனச்சேன், ரொம்ப களைப்பா இருக்கு நல்லா தூங்கணும்'.
"என்னது தூங்கணுமா"
என்னடா இது, இவ்வளவு நேரம் காத்திருந்தது வீணாயிடுமா..? வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என தோன்றியது. அதற்குள் அவள் போர்வையை மூடி படுத்து விட்டிருந்தாள். 
"என்னங்க, தூங்கும்போது என்னை தொடாதீங்க,சின்னவயசு பழக்கம், 
தூங்கும்போது யாராச்சும் தொட்டா நான் என்னையறியாம எத்தி 
விட்டுடுவேன். ஒருதடவ இந்தமாதிரி எங்க பெரியம்மாவை  எத்தி விட்டு 
அவுங்க கால் ஒடஞ்சு போச்சு".

ஒரு நிமிஷம் என் இதய துடிப்பு நின்றது போலிருந்தது.
சந்தேகத்துடன் கையை வைத்துப் பார்த்தேன். இல்லை அது வேகமாக 
துடிக்க தொடங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மீது  கை பட்டுவிட்டாலோ..? கிரிகெட் விளையாடும்போது உபயோகிக்கும் சேஃப்டிபேட் ஏதாவது 
போடணுமா?. எதுக்கு வம்பு என்று நான் போயி ஓரத்தில் இருந்த 
சோஃபாவில் நிம்மதியாக படுத்து தூங்கினேன். 

விடிந்தது. எனது களைப்பு நன்றாக குறைந்திருந்தது. நேற்றிரவு அவள் போர்த்தியிருந்த போர்வை என் மீது போர்த்தியிருந்தது. அட, இது எப்போ நடந்தது என்று எழுந்து பார்த்தேன். கட்டில் மீது இருந்த 
படுக்கை விரிப்புகள் ஒழுங்காக மடித்து வைக்கப் பட்டிருந்தது.பரவாயில்லையே, எனக்கு வாய்த்த மனைவி சுறுசுறுப்பும் சுத்தமும் கொண்டவளாக 
இருக்கிறாளே, நேற்று கலைந்து கிடந்த சூட்கேஸையும் காணோம். நான் எழுந்திரிக்கும் முன் அதையும் சீராக அடுக்கி எங்கோ எடுத்து வைத்துள்ளாள். பக்கத்துக்கு டேபிள் மீது டீ ரெடியா இருந்தது. கிட்ட போயி பார்த்தேன். கிளாஸ் காலியாய் இருந்தது. ஆனா அது என்ன டீ கிளாஸ் கீழ ஒரு பேப்பர் 
மடிச்சு வச்சிருக்கு, குழம்பிய  சிந்தனையோடு அதை எடுத்து படித்தேன். 

"என்னை மன்னியுங்கள். என் காதலனுடன் நான் போகிறேன். அவன் நேற்றிரவு செல்போனில் பேசினான். நாங்கள் ஆறு ருஷமா 
காதலிக்கிறோம். புரியிது. கல்யாணத்துக்கு முன்னமே ஏன்  சொல்லலன்னு நீங்க  நினைக்கலாம்.என்ன செய்வது?. 
அவனுக்கு வேலை எதுவும் இல்லை.காசுக்காகத்தான் இந்த கல்யாணம். 
அப்பா வரதட்சினையா கொடுத்த நகைகளும்,கல்யாணத்துக்கு நீங்க எனக்கு 
கொடுத்த பனிரெண்டு பவன் நகைகளும் எடுத்துக்கொண்டு நான் போகிறேன்.
நீங்க வருத்தப்படாதீங்க. நீங்கள் மிகவும் நல்லவர். நான் காதலிக்காமல் இருந்திருந்தால் உங்களை கல்யாணம் செய்தது 
எனக்கு ரொம்ப பெருமையாக இருந்திருக்கும்.எதுக்கும் இன்னும் ஒரு ஆறு மாசத்துக்குல் நீங்க வேற கல்யாணம் எதுவும் பண்ணாதீங்க. ஒருவேளை அவன் என்னை சரியா வச்சுக்கலன்னா நான் உங்களிடமே திரும்பி  வந்துவிடுவேன். நீங்க என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்று  நம்புகிறேன். அன்புடன் உங்கள் ......"

கடிதம் படித்து முடித்ததும்,
 "அம்மா....."
என உரக்க கத்தினேன். ஓடிவந்த அவரிடம் கடிதத்தை படிக்க கொடுத்து புலம்பினேன்.
"இப்ப எல்லாருக்கும் சந்தோஷமா.?, நாயா பேயா ஓடி அலைஞ்சு சம்பாதிச்ச 
பணம். என்னெல்லாம்  சொன்னீங்க..பன்னிரெண்டு  பவுன் நகை போட்டது ரொம்ப கொறச்சலா இருக்கு, இப்ப பாத்தீங்களா ஆறு மாசமில்ல ஆறு 
வருஷத்துக்கு இனி கல்யாணம் பண்ண முடியாது. இந்த கல்யாண 
செலவுக்கு வாங்கின கடன அடைக்கவே எவ்வளவு வருஷம் ஆகுமோ தெரியல". (சத்தம் அதிகமாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ரூமுக்குள் நுழைந்தனர்) எல்லாவரையும்  பார்த்து எனக்கு மீண்டும் கோபம் பொங்கியது.
"எல்லாருக்கும் சந்தோசமா, காஸ்ட்லி இன்விடேஷன் கார்ட் வேணும், ஸ்பெசல் சாப்பாடு வேணும், மண்டபம் பெருசா வேணும், வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும், கல்யாணம் ரொம்ப கிராண்டா பண்ணனும்னு, இப்ப எல்லாருக்கும் சந்தோஷமா..?"

என்னுடைய புலம்பல் நீண்டு அங்கு உள்ளவர்களை  வாய்பேச முடியாமல் 
செய்தது.ஒரு சின்ன அமைதிக்கு பின் திடீரென எல்லாவரும் சத்தமாக சிரிக்கத்  தொடங்கினர். எதுவும் புரியாமல் முழிபிதுங்கி நின்றதும் அவர்களை விலக்கி தள்ளியபடி ஒரு தேவதை கையில் டீ கிளாஸுடன் உள்ளே வந்தாள். அவளேதான், தன் காதலனுடன் ஓடிப்போவதாக சொன்னவளேதான்.

"நீ எங்களையெல்லாம் எத்தனை தடவை ஏமாற்றி விளையாட்டு காட்டியிருப்ப, உனக்கு மட்டும்தான் ஏமாத்த தெரியுமா, உன்னை எப்படி தவிக்க விட்டோம் பாத்தியா.?ஆனா எங்க அண்ணிக்கு இதுக்கு நாங்க 
நன்றி சொல்லணும். சூப்பரா ஆக்ட் பண்ணினாங்க",
என்றெல்லாம் சொல்லியபடி என் மூன்று தங்கைகளும் என் மனைவியின் 
தோளைக்கட்டிக்கொண்டு நின்றனர். உண்மைதான், அவர்களை  விளையாட்டு காட்டி ஏமாற்றுவது என் பழக்கம். 

எனக்கு கவலையும், கோபமும், சந்தோஷமும் எல்லாம் ஒன்றாக மாறி மாறி வந்தது.
"உங்களுடைய முதலிரவு சந்தோஷத்த  பாழாக்கினதுக்கு எங்க எல்லாரையும் மன்னிச்சுடு",
வீட்டில் இருந்த அனைவரும் ஒண்ணா  சொன்னதை கேட்டதும் தான் எனக்கு இது 
எல்லாரும் சேர்ந்து நடத்தின நாடகம் என்பது புரிந்தது.
"சரி சரி எல்லாரும் கிளம்புங்க, பொண்ணும்  மாபிள்ளையும் ஏதாவது ரகசியம் பேச வேண்டியிருக்கும்" 
பாட்டி குறும்பா ஆர்டர் போட்டதும் எல்லாரும் 
ரூமை விட்டு வெளியேறினர். அவள் கதவை அடைத்தாள்.

இப்போது அந்த அறையில் நானும் அவளும் மட்டும், நேற்று நான் பார்க்க விரும்பிய அச்சம்,மடம், நாணம் அத்தனையும் 
இப்போது அவள் முகத்தில். மெதுவாக என்னருகில் வந்து சொன்னாள்
 "டீ". 

கிளாஸை  ஏந்திய கையை விலக்கியபடி  அவள் காதில் மெல்ல சொன்னேன்,
''ஐயோ, ...இன்னும் பல் தேய்க்கல"

இருவரும் ஒன்றாக உரக்க சிரித்தோம்.

 
 

 




திங்கள், செப்டம்பர் 29, 2014

படித்தபடி... ரசித்தபடி...சிரித்தபடி....3


அலுவலகத்தில் இரண்டு பெண்களின் உரையாடல்

ஒருத்தி: நேத்து சாயந்திரம் ரொம்ப ஜாலியா இருந்தது. உனக்கு எப்படி?

மற்றவள் : அதையேன் கேக்கறே...? செம்ம கடுப்பு. என் புருஷன் வேலையில் இருந்து திரும்பி வந்ததும் சாப்பிட்டு உடனே படுத்து தூங்கி விட்டார். நீ உன் கதைய சொல்லு.

ஒருத்தி : ரொம்ப சந்தோசமா இருந்தது. அவர் ஆபீசில் இருந்து வந்ததும் டின்னருக்கு என்னை வெளியே கூட்டிபோனார். அது முடிஞ்சதும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே நடந்தோம். வீட்டுக்கு வந்ததும் பெட்ரூமில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து ரொம்ப நேரம் பேசினோம். எல்லாம் கனவு மாதிரி இருந்தது.

அதே சமயம் வேறு அலுவலகத்தில் இவர்களது கணவர்களின் உரையாடல்

ஒருவன்: நேத்து சாயந்திரம் என்னப்பா விசேஷம்.?

மற்றவன் : சூப்பர்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் டைனிங் டேபிள்ள சாப்பாடு ரெடியா இருந்தது. சட்டுபுட்டுனு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கிட்டேன். உனக்கு எப்படி?

ஒருவன் : ரொம்ப பேஜாரா போச்சுப்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா வீட்ல கரண்ட் இல்லை. கரண்ட் பில் கட்டாததால் EB காரன் பீஸ புடுங்கிட்டு போயிட்டான். சரின்னு பொண்டாட்டிய கூட்டிகிட்டு ஹோட்டலுக்கு போயி சாப்பிட்டேன். கையில இருந்த காசெல்லாம் ஹோட்டல் பில்லுக்கே சரியா போச்சு. திரும்பி வரும்போது ஆட்டோக்கு குடுக்ககூட காசில்ல. நடந்தே வர வேண்டியதாச்சு. வீட்டுல கரண்ட் இல்லாததால தூக்கமே வரல. இருந்த ஒன்னு ரெண்டு மெழுகுவர்த்திய கொளுத்தி வச்சுக்கிட்டு தூக்கம் வரவரைக்கும் பேசிகிட்டு இருந்தோம்.

 

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

ஏன்னா நான் ரொம்ப உஷார்


என் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் செய்யும்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன். (பயம் இல்லைங்க, ஹீ..ஹீ..மரியாதை... மரியாதை..) சரக்கடிப்பது அவளுக்குப் பிடிக்காது. அதனால் மனைவியின் மீது மரியாதை தோன்றும் சமயங்களில் கொஞ்சம் சரக்கு அடிப்பதுண்டு. அப்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய நேரம். வீட்டில் பிள்ளைகள் அவர்களுடைய அறையில் படித்துக்கொண்டிருந்தனர். 
மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் கடமுடாவென ஓசையுடன் மோதி விளையாடிக் கொண்டிருந்தன. வாசலைத் தாண்டி உள்ளே சென்ற நான் மெதுவாக ஹாலில் அலமாரியில் மறைத்து வைத்திருந்த ஸ்காட்ச் பாட்டிலை எடுத்தேன். சுவரில் மாட்டியிருந்த போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னை உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. வேறு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டேன். ஏன்னா நான் எப்பவும் ரொம்ப உஷார். வாஷ் பேசின் மேலே உள்ள பிளாஸ்டிக் ரேக்கிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்து மடமடவென ஒரு கட்டிங் ஊற்றிக் குடித்தேன். கிளாஸை வாஷ்பேசினில் கழுவி மீண்டும் பிளாஸ்டிக் ரேக்கில் பத்திரமா வைத்தேன். ஆங்..ஆங்.. வச்சாச்சு.... ஸ்காட்ச் பாட்டிலையும் பத்திரமா அலமாரியில் ஒளிச்சு வச்சாச்சு. போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சிரித்தது.

மெதுவா சமையலறைக்குள் நுழைந்தேன். மனைவி சமையலுக்கு உருளைக்கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்தாள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: "என்னம்மா இன்னிக்கு ராத்திரிக்கு சமையல்?'
மனைவி: "சப்பாத்தியும்,உருளைக்கிழங்கு குருமாவும்?"
நான்: "சித்தப்பா போன் பண்ணினாங்களா?. அவுங்க பையனுக்கு வேலை கெடச்சுதா?"
மனைவி: "எங்க கெடச்சுது. அவன் சும்மா ஊரை சுத்திக்கிட்டு இருக்கான்".

நான் சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் ஹாலில் அலமாரிக்கு அருகே சின்ன சப்தங்கள். ஆனா அது நான் அலமாரியில் இருந்து  ஸ்காட்ச் பாட்டில் எடுக்கும் சவுண்டு இல்ல. வாஷ் பேசின் மேல உள்ள பிளாஸ்டிக் ரேக்கில் இருந்து கிளாஸ மெதுவா எடுத்து கடகடவென இன்னொரு கட்டிங் அடிச்சு முடிச்சேன். பாட்டிலை கழுவி வாஷ் பேசின்ல வச்சிட்டேன். பிளாஸ்டிக் கிலாஸ பத்திரமா அலமாரிக்குள்ள வச்சிட்டேன். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

மீண்டும் மனைவியிடம் சென்று, "அவன் சின்னப் பையன் தானே, அப்படித்தான் இருப்பான்".
மனைவி: "ம்.... சின்னப் பையனா..? மூணு கழுதை வயசாச்சு.காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப்போகுது".
நான்: "ஆமா. நான் மறந்தே போயிட்டேன். இப்பத்தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு".

நான் மீண்டும் திரும்பி வந்து உருளைக்கிழங்கை அலமாரியில் இருந்து வெளியே எடுத்தேன். ("ச்சே அலமாரியை யாரோ இடம் மாத்தி வச்சிருக்காங்க"). ரேக்கிலிருந்து ஸ்காட்ச் பாட்டில எடுத்து ஒரு கட்டிங் வாஷ் பேசினில் ஊற்றி மடமடவென குடித்து முடித்தேன். போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சத்தமாக சிரித்தது. நான் ரேக்க எடுத்து  சமையலறைக்குள்  வைத்துவிட்டு சப்பாத்தியை கழுவி பிளாஸ்டிக் அலமாரில பத்திரமா வைத்தேன். மனைவி இன்னும் வாஷ் பேசினில சமையல் பண்ணிக் கொண்டு இருந்தாள். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: (சற்று கோபத்துடன்), "எங்க சித்த்தப்பா பையனை நீ கழுதைன்னா சொல்லுறே, பிச்சிடுவேன் பிச்சி"
மனைவி: "சும்மா வளவளன்னு பேசாம போய் உக்காருங்க".

நான் மீண்டும் அலமாரிக்குள் சென்று ஸ்காட்ச் பாட்டிலுக்குள் இருந்த சப்பாத்தியை எடுத்து இன்னொரு கட்டிங் குடித்தேன். வாஷ் பேசின நல்லா கழுவி பிளாஸ்டிக் ரேக்கில வச்சிட்டேன். போட்டோவில் இருந்து மனைவி என்னைப் பார்த்து இன்னும் சத்தமா சிரிச்சது. கழுதை பொம்மை இன்னும் சமையல் செய்து கொண்டிருந்தாள். ஆனா யாரும் என்னை பார்க்கவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: "அப்படீன்னா கரடிக்கு இன்னும் வேலை கிடைக்கலையா...?"
மனைவி: "ஏங்க போயி நல்லா தண்ணி ஊத்தி முகம் கழுவுங்க".

நான் மீண்டும் சமையறைக்குள் சென்று ரேக்கின் மீது அமைதியாக உட்கார்ந்தேன். இந்த ஸ்டவ்வ ஏன் ரேக் மேல வச்சிருக்கான்னு தெரியலை. வெளியே பாட்டில்கள் மோதி உருளும் ஓசை கேட்டது. மெதுவா எட்டிப்பார்த்தேன். மனைவி ஒரு கட்டிங் மடமடவென குடித்து முடித்ததை பார்த்தேன். நல்லவேளை எந்த கழுதையும் இதைப் பார்க்கவில்லை. ஏன்னா கரடி பொம்மை  ரொம்ப உஷார். சித்தப்பா இன்னமும் சமையல் செய்து கொண்டிருந்தாள். போட்டோவில் இருந்த நான் மனைவியை பார்த்து பலமாக சிரித்தேன்.
"ஏன்னா நான் ரொம்ப உஷார்".

வெள்ளி, ஜூன் 27, 2014

பதில்களை மாற்றிவிடும் கேள்விகள்

ஒரே கேள்விய பல பேரிடம் கேட்கும்போது விதவிதமா பலவிதமா பதில்கள் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனா ஒரே கேள்விக்கு ஒருவரே பலவிதமா பதில் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமெடியில், "அப்போ இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கியே, நீங்க எத்தனை பேருடா இருக்கீங்க?" ன்னு கேட்கும்போது அவர் "யோவ், வெளியில தெரியறது ஒரு ரூபம், ஆனா உள்ள திரியறது பல ரூபங்கள். அதையெல்லாம் வெளியில விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்கப்போட்டிருக்கோம், அதனாலதான் நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கோம்" என்று  சொல்லுவார். நெனச்சுப்பாத்தா நமக்குள்ளே பல ரூபங்கள் இருப்பது உண்மைதான்.
இந்த ரூபங்கள் அவரவருடைய வயதையும் அனுபவத்தையும் பொறுத்து
உருவம் கொண்டு வெளிவந்து நடமாடுகிறது. உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் கீழே உள்ள கேள்வி பதில் பட்டியலை பாருங்க. ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பல ரூபங்கள் சொல்லுற வேற வேற பதில்களைப் பாருங்க.

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?


பதில்கள் - 10 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அப்பாவும், அம்மாவும் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: கணக்கு டீச்சர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பரீட்சை தொடங்கிய நாள் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: ஸ்கூல் லீவு விட்ட போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: பசங்க கூட விளையாடுவது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: இப்பவே வளர்ந்து பெரியவனா ஆயிடணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: கணக்கு பாடம் 

பதில்கள் - 17 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என்னோட நண்பன் ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சதீஷ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பள்ளிகூடத்தில் நடந்த பிரிவுபசார தினத்தன்று.
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: +2 பரீட்சையில் நல்ல மார்க்குடன் பாஸ் பண்ணின போது. 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: FACEBOOK 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்லா படிக்கணும். நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணனும். ஊழலை ஒழிக்கணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: நமது சமுதாயம் அலட்சியத்துடன் இருப்பது

பதில்கள் - 18 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி......இல்லை இல்லை ராஜேஷ்
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை எல்லாரையும் பிடிக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: விடுமுறையில் உள்ள கல்லூரி நாட்கள்.  
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி என்கிட்டே முதல் முதலா பேசினப்ப
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சாட்டிங் 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்ல வேலையில் சேரவேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: சந்தேகமே வேணா....பரீட்சையேதான்.

பதில்கள் - 22 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அவளோட அப்பா 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்து சுபாஷினியை பிரிந்து ஹைதராபாத் போனபோது
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி சம்மதம்னு சொன்ன போது
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சுபாஷினியோட கூட இருக்கணும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: சுபாஷினியை திருமணம் செய்வது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை 

பதில்கள் - 26 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அதை ஞாபகப்படுத்தாதீங்க. பிளீஸ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவும் இல்லை
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஏதாவது செய்தபடி இருக்கணும். சும்மா இருந்தா ஒண்ணொண்ணா ஞாபகம் வந்துண்டே இருக்கும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: ஒரு கனவும் இல்லை. எல்லாம் கலைந்துவிட்டது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: இன்னொரு தடவை காதல் / கல்யாணம் 

பதில்கள் - 28 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அம்மா 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: ஆபீசில் கூட வேலை செய்யும் பிரதீப் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அப்பாவோட மரணம் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்தபோது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஓவர் டைம் வேலை செய்வது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: கொஞ்சம் பணம் காசு சேர்க்க வேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: எதிர்கால வாழ்க்கைதான் 

பதில்கள் - 38 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் மகன் அம்ருத் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என்னோட ஆபீஸ் மேனேஜர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: ஆபீசில லீவு கேட்டு கிடைக்காதபோது 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சம்பளம் வாங்கும்போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பது  
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: குழந்தைகளின் எதிர்காலம் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: விலையேற்றம் 

பதில்கள் - 59 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் பேத்தி சுவேதா  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என் மகனோட மனைவி  
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலையிலிருந்து ஒய்வு பெற்ற நாள். 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: பேத்தி சுவேதா பிறந்த போது  
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: இப்போ செய்வது எல்லாமே பொழுத போக்கறதுக்குத்தானே 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: யாருக்கும் தொல்லை கொடுக்காம போயி சேரணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: மகனுக்கு ஜாதகதோஷம் நெறைய இருக்கு. ஆனா அவனுக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கையே இல்லை. அதை நினைசாதான் பயமா இருக்கு