சனி, பிப்ரவரி 22, 2014
வெள்ளி, பிப்ரவரி 21, 2014
வெற்றிப்படிகட்டு
நிறமற்ற ஓர் இரகசிய உலகிற்கு போக
வழி சொல்கிறேன் கவனமா கேட்டுக்கொள்.
இந்த மாடிப்படியில் வழியாக ஏறிச்செல்
இதன் சூனியங்களில் உன் கால்தடங்கள் பதிவதில்லை
ஓசைகளும் இரைச்சலும் கேட்பதில்லை.
அங்கு தொண்டையை அடைக்கும் சோகங்களில்லை.
எப்போதும் சந்தோஷமும் சிரிப்பும் மட்டுமே.
கூடவே நீ ஆசைப்பட்ட அமைதியும் நிம்மதியும்
இதுநாள் வரை உன்னை ஏமாற்றிக் கொண்டிருந்த
அர்த்தமில்லாத வார்த்தைகளும்
வாக்குறுதிகளும் இங்கு இல்லை
இந்த மாடிப்படிகளுக்குக் இருட்டின் நிறம்
பட்டப்பகலில் வெளிச்சம் அள்ளி வீசும் கதிரவனோ
நட்டநடு இரவில் பாலொளி வீசும் சந்திரனோ
இந்த மாடிப்படியில் கால் வைத்ததில்லை.
தன்னிலேயே துவங்கி தன்னிலேயே முடிந்திடும்
ஒரு கோளமாக உன்னை மாற்றிக் கொண்டு
இந்த மாடிப்படிகளில் உருண்டு செல் - அல்லது .
அதிலிருந்தே பறந்து அதிலேயே கலந்துவிடும்
புகையாய் உன்னை மாற்றிக் கொண்டு
இந்த மாடிப்படிகளில் தவழ்ந்து செல்.
ஆனால் படி ஏறிச்செல்லும் களைப்பில்
ஓய்வெடுக்க அதிக நேரம் அமர்ந்து விடாதே.
அதன் இருட்டு உன் கண்களின் வழியே ஊடுருவி
உன் இருதயத்தில் நுழைந்து
உன் இரத்த நாளங்களில் கலந்துவிடும்.
இந்த மாடிப்படி ஒரு கருவி மட்டுமே.
அதைக் கடந்ததும் காண்பாய் நிறமற்ற மணமற்ற ஒரு உலகம்
உனக்கு மட்டும் சொந்தமான ஒரு உலகம் - அங்கு
உன் கால்களை பூட்டிய முயலாமை விலங்கு அறுந்துவிழும்
உன் கைகளை கட்டியிருந்த இயலாமை கயிறுகள் விலகும்
உன் கண்ணை மூடியிருந்த அறியாமை கருந்துணி அவிழும்
கண்ணீரையும், ஏளன சிரிப்பையும், வஞ்சனைகளையும்,
இரத்த காயங்களையும், வலிகளையும் படிகளாய் கொண்ட
இந்த மாடிப்படிகளில் மூச்சைப்பிடித்து ஏறிச்செல்.
சோர்ந்துபோகாமல் நீள உயரங்கள் பாராமல்
இன்றே நீ நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
நாளைக்கு நீ சுதந்திர மனிதன்
நானொரு பைத்தியம்.....தேவை வைத்தியம்
ஒருமுறை ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினேன். எல்லாவரும் என்னை பரிகாசம் செய்தனர்."இவனுக்கென்ன கிறுக்கா ?...வேலியில போற ஓணான எடுத்து வேட்டியில விட்டுக்கிறானே......"என்றனர்.
.
பின்னொரு முறை நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யுங்கள் என சொன்ன போது எல்லோரும், "இவன் பெரிய கிறுக்கனா இருப்பானோ? தேவை இல்லாத உபதேசமெல்லாம் கொடுக்கறானே" என்றனர்.
பின்னொரு முறை பசியோடு அலைந்து கொண்டிருந்த ஒரு பிச்சைகாரனுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுத்தேன். எல்லோரும், "இவனுக்கு என்ன மறை கழன்று விட்டதோ? கண்ட கண்ட பொறுக்கி பயலுகளுகெல்லாம் அன்னதானம் பண்ணுரானே" என்றனர்.
பின்னொரு முறை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தேன். எல்லோரும் "நிச்சயமா இவனுக்கு பைத்தியம்தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராச்சும் இப்படி வீணாகக்குவங்களா? என்றனர்.
பின்னொரு முறை நான் செய்யும் சேவைகளை பிடிக்காத ஒருவன் என்னை தாக்க வந்தபோது நான் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தேன். அவன் மீண்டும் வீண் வம்பு வளர்த்து என்னை அடித்து நொறுக்கினான்.ஆனால் நான் அவனை திருப்பி அடிக்கவில்லை. எல்லோரும் "இவன் சரியான பொட்டப்பயலா இருக்கானே. அடிக்கிறவன திருப்பி அடிக்க வேண்டியதுதானே" என்றனர்.
எனக்குள்ளே பழிவாங்கும் எண்ணம் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியதொடங்கியது. கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்து என்னை அடித்தவன் கதையை முடித்தேன். இல்லை இல்லை. முடிக்க வைத்தேன். எல்லோரும் "அவன் சிங்கம்டா....கில்லாடிடா..." என்றனர்.
இந்தமுறை எனக்கே தோன்றியது, எனக்கு பைத்தியம் என்று. "ஆமாம் ஆமாம் நான் பைத்தியக்காரன்தான்“
புதன், பிப்ரவரி 12, 2014
கொயந்த அயுவுது
சுருக்குகயிற்றின் முடி இறுகியது.அந்த வயோதிகனுக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை. இழுத்த இழுப்புக்கு நடக்க தொடங்கினார். உடலின் எடை குறைந்து கொண்டே வருவது போல் தோன்றியது. நெடுநாட்களாக தொல்லைகொடுத்துக் கொண்டிருந்த எல்லா நோய்களும் தீர்ந்து சட்டென்று சுகமானது போல தோன்றியது. கழுத்தில இருந்த கயிறும் அதை இழுத்துகொண்டிருந்த ஆளையும் திடீரென காணவில்லை.
சிந்தனை செய்தபடி இருக்கும்போதே அவரது உரோமங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து காற்றில் பறக்க தொடங்கியது அவர் உடல் சிறியதாகிக்கொண்டே சென்றது.உருவம் சுருங்கி சுருங்கி ஒரு அணுவின் அளவினை அடைந்தது. சுருண்டு நெளிந்த அவரை யாரோ போர்த்தி மூடினர். சறுக்கு மரத்தில் வழுக்கி வீழ்வதுபோல் ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்தார். எவ்வளவு நேரம் தூங்கினார் என்றே அவருக்கு தெரியவில்லை.எங்கும் ஒரே இருட்டு. இருட்டு மட்டும்.
கண்விழித்தபோது தூரத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சம். அந்த வெளிச்சத்தை நோக்கி யாரோ வேகமாக தள்ளி விட்டது போல் தோன்றியது.வேகமாக முன்னேறி சென்றபடியே இருந்தார்.
அவரது எடை சிறிது கூடியிருந்தது. எங்கிருந்தோ யாரோ அழும் குரல் கேட்டது. தூரம் குறைய குறைய வெளிச்சத்தின் பிரகாசம் அதிகரித்தது. கூடவே அழுகையின் குரலும். அவர் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டார்.
அவரது நினைவுகள் மறைந்து மனது சூன்யமாகியது. ஒன்றும் அறியாத அவஸ்தை, ஒன்றும் நினைவுக்கு வராத அவஸ்தை. சட்டென யாரோ அவரை பிடித்து.இழுக்க இருட்டு எனும் போர்வைக்குள் இருந்து வெளிச்சத்திற்கு வந்து முடி நரைத்த ஒரு முதிய பெண்மணியின் கையில் வீழ்ந்த அவர் மீண்டும் ஒரு சிறிய குழந்தையாய் மாறியிருந்தார்.
அற்புதமான இந்த பூமியில் இன்னொரு பிறவியினை தந்த கடவுளுக்கு அவர் உரக்க உரக்கக் கூவியபடி நன்றி கூறினார். ஆனால் கூடியிருந்தவர்கள் குழந்தை பாலுக்கு அழுவதாக நினைத்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)