வெள்ளி, நவம்பர் 29, 2013

சமத்துவ மாடிப்படி

நம்மளோட சின்ன  வயசுல நடந்தத எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியாது என்றாலும் சில விஷயங்கள்  அதுவும் கொஞ்ச காலத்துக்கு பழக்கமாக மாறி பின் மறந்துபோனவை கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கும் இல்லையா.......?

"இப்ப என்னதாண்டா  சொல்ல வர்ற? ஞாபகம் வச்சுக்க முடியாதுன்னும் சொல்லுற. அப்புறம் உடனே ஞாபகம்  இருக்கும்னும் சொல்லுற", அப்பிடின்னு ஒரு சவுண்டு கேக்குது .

சாரி பாஸ், மேட்ருக்கு வர்றேன்.





எனக்கு மாடிப்படிகள்  என்றால் ரொம்ப பிடிக்கும். என்ன காரணம்னு தெரியாது. அனால் எனக்கு பிடித்த சில விஷயங்களில் முக்கியமான ஒன்று மாடிப்படிகள். நம் வாழ்கையின் ஒவ்வொரு சாதகமான  நிகழ்வுகளும் நம்மை  நல்ல நிலைக்கு உயர்த்தும் ஒவ்வொரு படிகட்டுகள் தான். நம்மை  நிலை உயர்த்திக்கொள்ள நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு படிகட்டுகள், அப்படீன்னா லிப்ட்ல மேல போறவன என்ன சொல்ரேன்னு  கேக்கறீங்களா?  அவுங்கள விடுங்க நாம மெதுவா மாடிப்படி ஏறியே போவோம்.




எனக்கு சொந்த ஊரு கேரளாவில் உள்ள ஒரு சின்ன கிராமம். அப்பா சென்னைக்கு வேலை தேடி வந்து செட்டிலாகி   இப்போ சென்னை சொந்த ஊராகி அந்த கிராமம்  தூரத்து சொந்த ஊராகி விட்டது, சரி விஷயத்துக்கு வருகிறேன். பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான்.அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். சென்னையில் வந்து நான் கண்ட முதல் அதிசயம் ஒரு மாடிப்படி. ஊரில் மாடிப்படி உள்ள வீடுகள் மிகவும் குறைவு என்பதாலோ நான் பார்க்காமல் விட்டதாலோ என்னவோ வந்த இடத்தில 5 வயது சிறுவனான எனக்கு  முதன் முதலாக பார்த்த மாடிப்படி அதிசயமாக தோன்றியது.





அப்பா வேலை செய்து கொண்டிருந்த கடை ஓனரின் வீட்டில்தான் நாங்கள் வாடகைக்கு தங்கியிருந்தோம்.முன்புறம் வீட்டு ஓனரின் வீடும் மாடியில் ஒரு வீடும். பின்புறம் ஒரு ஓலைவேய்ந்த வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். பின்புறம் உள்ள எங்கள் வீட்டுக்கு செல்லும் வராண்டாவில்தான் மாடிக்கு செல்லும் வழி. மாடிப்படியின் முடிவில் ஒரு கதவும் அதை தாண்டி ஒரு சிறிய வரண்டாவும் பிறகு  அந்த வீடும். ஆனால் மாடியில் குடியிருந்தவர்கள் பாதுகாப்புகாக மாடி ஏறியதும் உள்ள கதவை சாத்தியே வைத்து இருப்பார்கள். அதனால் அந்த மாடிப்படி ஏறக்குறைய ஒரு சின்ன குகை மாதிரியாக இருக்கும்,  அதன் பிறகு வந்த  நாட்களில் அந்த மாடிப்படியில் தனியாக அமர்ந்து இருப்பதும் படிகளை எண்ணிக்கொண்டே மேலும் கீழுமாய் ஏறி இறங்கி விளையாடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்காக ஆகிப்போனது.





பக்கத்திலேயே இருந்த மாநகராட்சி பள்ளிகூடத்தில் என்னை சேர்த்து விட்டார்கள், அந்த பள்ளியிலும் மாடிப்படிகள் இருந்தது. ஒன்றல்ல இரண்டு மாடிப்படிகள். ஆனால் ஒன்றாம் வகுப்பு கீழ் தளத்தில் இருந்ததனால் அந்த மாடிப்படிகள் இருந்த விஷயம் எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அதாவது நான் இரண்டாவதோ அல்லது  மூன்றாவதோ படிக்கும்போதோதான் தெரியவந்தது, அடா....டா....டா....டா....டா. இது மொதல்லையே தெரியாம போச்சேன்னு வருத்தப்பட்டு அதுக்கப்புறம் அங்கேயும் மாடிப்படிதான் என்னோட தினசரி விளையாட்டு தளமா ஆகி போச்சு.

அந்த சமயங்களில் எனக்கு விளையாட்டு தோழர்கள் யாரும் கிடையாது;பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி  நான் தனியாகத்தான் விளையாடி கொண்டிருப்பேன். ஏன்னா மாடிவீட்டுகாரங்களும் வீட்டு ஓனர் வீட்டுக்காரங்களும்  ரொம்ப வசதியானவங்க. கொஞ்சம் தள்ளியே நிக்கணும்.

சென்னைக்கு நான் வந்து செட்டிலான அந்த வருடம் "மழை வருடம்" போல . சரியாய் சொல்வதென்றால் 1976 நவம்பர் மாதம் சரியான மழை. எங்கள் வீட்டுக்குள்ளும், எங்க வீட்டு ஓனர் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு இடமில்லாமல் எல்லாவரும் நாலைந்து  நாட்கள் மாடி வீட்டில் தஞ்சமடைந்தோம். நான் விளையாடும் அந்த மாடிப்படிதான் எல்லாவருக்கும் சமையல் செய்யும் சமத்துவபுரமாக  மாறியிருந்தது. நான் மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்கும் நாட்கள் அவை. ஒருவேளை இயற்கை எங்கள்  எல்லோரையும் சரிசமானமாக மாற்றிய  அந்த சின்ன வயது சம்பவம்தான் நான்  மாடிப்படிகளை விரும்புவதர்க்கு காரணமோ என்னவோ.................. ?



சனி, நவம்பர் 23, 2013

எல்பிடபிள்யூ


ஒரு நல்ல கிரிகெட் மேட்ச் நண்பர்களுடன் சேர்ந்து டிவியில் பார்த்து கொண்டு இருந்தேன். திடீரென அம்பயர் ஒரு தவறான எல்பிடபிள்யூ கொடுத்து பிறகு மைதானத்தில் உள்ள பெரியதிரையில் ரீப்ளே பார்த்துவிட்டு சின்ன இளிப்புடன் தலையை குனிந்து கொண்டான்.

போச்சு போச்சு அவுட். சரியான மாங்கா  மடையனை அம்பயரா போட்டு இருக்கான்டா. அவுட்டே இல்லே. ரீப்ளே பாரேன் பால் நல்லா பேட்டுல பட்டு திரும்புது . இத போயி எல்பிடபிள்யூ குடுத்துட்டான். கூட மேட்ச் பார்த்து கொண்டிருந்த கூட்டாளி புலம்ப ஆரம்பித்தான். நானும் பார்த்தேன். அவுட் இல்லைதான். ஆனாலும் பேட்ஸ்மென் சின்ன வருத்ததுடன் அம்பயரை எதுவும் கேட்காமல், சொல்லாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினான். பாவம் அவன் என்ன பண்ணுவான். எதாவது சொல்லி தனது எதிர்கால கிரிகெட் வாழ்வுக்கு வினையாகி  விட்டாலோ என்று நினைத்திருப்பானோ என்னவோ.



மனசு மெல்ல 25 வருட பழைய நினைவுகளுக்கு சென்றது. கிரிகெட் விளையாடுவது சாப்பாடுபோல ஆகியிருந்த வயசு. அனால் விளையாடுவது எங்க தெருவில் மட்டும்தான். விளையாட தெரிஞ்சவன்னு எவனும் கிடையாது. 2 டீமுக்ன்னு ஆள் கிடச்சா போதும். ஆட தொடங்கிருவோம்.  ஆள் எப்படியாச்சும் கெடச்சிரும் என்பதால் தினமும் ஆடுவோம். அப்புறம் பக்கத்துக்கு தெரு டீம் கூட அருகில் இருந்த கிரவுண்டுக்கு சென்று ஆட ஆரம்பித்தோம். ஞாயிற்றுக்கிழமை  மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் கிரவுண்டுக்கு. மற்ற நாட்கள் மீண்டும் தெருவில்.

ஒரு நாள்  டீம்ல சின்ன டிஸ்கஷன். 'எவ்வளவு நாள்தான் பக்கத்துக்கு தெரு பசங்கக் கூடவே ஆடுறது' ஒரு தரம் கூட்ஸ் ஷெட் கிரவுண்டுல டோர்னமென்ட் மேட்ச் ஆடலாண்டா, எங்க எங்க டீம் ஆல் ரவுண்டர் ராஜேந்திரன் முன்மொழிஞ்சதை உடனடியா நான் வழி மொழிஞ்சேன். சத்யா அப்போ டீம் காப்டன், பேட் வச்சிருக்குறவன், மெயின் பைனான்சியர் எல்லாம். "போடா அதெல்லாம் வாணா. காசு  கட்டணும். கூதல் அடிப்பானுங்க (ஏமாற்றுதல்). திருப்பி எதாச்சும் கேட்டா சண்டைக்கி வருவானுங்க. அந்த ஏரியாவுல ஒரு அவசரத்துக்கு ஓடி எஸ்கேப் ஆக கூட முடியாது" என்றான்..

நாங்க எதோ சண்டைக்கு கூப்பிட்டது போல அவன் பேசினது எங்களுக்கு பிடிக்கல. "ஏண்டா  எடுத்ததும் இப்பிடி பேசுற. ஒரு தடவ ப்ராக்டீஸ் மாதிரி ஆடி பாத்துருவோம். அதுக்கப்புறம் வேற இடத்துல டோர்னமென்ட் வெச்சா போக தைரியம் வரும்ல.  நம்ம டீம் மாதிரிதான் அவுங்களும். எவனுக்கும் ஆட தெரியாது", டோர்னமென்ட் ஆடும் ஆசையில் நான் அள்ளி விட்டேன். கூட  இருந்தவங்களும் ஒத்து ஊத அரை மனதுடன் சம்மதித்தான் சத்யா.



எல்லாம் நல்லபடியா முடிஞ்சு இதோ இன்னிக்கு எங்களுக்கு முதல் டோர்னமென்ட் மேட்ச். டோர்னமென்ட் நடத்துறவன் எங்களுக்கு ஆட்ட விதிகளை விளக்க ஆரம்பித்தான். "தொ பார்மா, 20 ஓவர் மாட்ச், ஒரே ஆளு 4 ஓவர்க்கு மேல போட  கூடாது. நோ பால், வைடுக்கு மட்டும் ரன்னு கீது. லெக் பைஸ் கடியாது. எல்பிடபிள்யூ இருக்கு தெர்தா?' எங்களுக்கு எல்லாம் ஓகே மாதிரிதான் பட்டது. கடைசியில் சொன்ன எல்பிடபிள்யூவை தவிர "இன்னாம்மா எல்பிடபிள்யூ இருந்தா லேக்பைஸ் குடுக்கனும்லே", கொஞ்சமா விவரம் தெரிஞ்ச சத்யா கேட்டான். '"அதெல்லாம் கடியாது, ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்', டாஸ்  போடலாமா? உடனடியா பதில் வந்தது. எங்களுக்கு லைட்டா எதோ புரிய ஆரம்பித்தது. எதோ எல்லாம் இல்ல, கூதல் அடிக்க ஆரம்பிசிட்டாங்க என்பதுதான் சரி.

வெந்த புண்ணுல வேல பாச்சுற மாதிரி, பழனி என்கிட்ட  கேட்டான், 'மதே, எல்பிடபிள்யூன்னா இன்னாடா?,. ?..?....?  "ஸ்டம்ப மர்சிக்கினு நிக்கும்போது பால் கால்ல பட்டா அவுட், அதான் எல்பிடபிள்யூ" நான் சொன்னது கண்டிப்பா அவனுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. டாஸ் போட்டு மேட்ச் ஆரம்பித்தது விட்டது.

"டேய்  இன்னிக்கு மேட்ச் மட்டும் ஜெயிச்சா போதுண்டா. செமிக்கு போயிடலாம். பாத்து விளையாடு",  என்கூட ஒபெனிங் பேட்ஸ்மேனா வந்த கன்னியப்பன் ரகசியமா சொல்லி விட்டு ஆட தொடங்கினான். அவன் கொஞ்சம் உஷார் பார்ட்டி. ஸ்டம்ப நல்லா காட்டிகொண்டே ஆடினான். வரிசையா 2 வைட் 1 நோபால் எல்லாம் சேர்த்து கொண்டே பந்து வீசிய கொண்டிருந்த பவுலர், காலில் பட்டதற்காக 2 முறை எல்பிடபிள்யூ அப்பீலும் கேட்டான். ஆனா அதெல்லாம் வைட் போக வேண்டிய பால்தான். எதிர  நின்னு பார்த்து கொண்டிருந்த நான் அம்பயர் நல்லா அம்பயரிங் பன்னுராறேன்னு நினைத்தேன்.  ஒரு வழியா ஓவரின் கடைசி பந்தை வீ சினான் எதிர் டீம் பவுலர். பந்து மீண்டும் ஒரு முறை கன்னியப்பன் பேடில் பட்டு விழுந்தது. ச்சே.... அதுவும் வைட் போக வேண்டியது வேஸ்ட் பண்ணிட்டான்.



"அ ...............வூ................ட்டே" ...............   பவுலர் கூவினான். அம்பயர் மெதுவாக கைய  தூக்கி அவுட் குடுத்தான்.  எனக்கு சர்ருன்னு கோவம் வந்து "ஏய், எதுக்குடா அவுட்டு. அது வைட் போக வேண்டிய பால்"...ன்னு அம்பயர மூஞ்சிக்கு  நேரா பாத்து கேட்டேன். 

"ஏய் சவுண்ட்லாம் வுடாத.....மவன ஏரியா  தாண்ட மாட்ட.....மூணு தடவ கால்ல பட்டிச்சில்ல .... அவுட்டும்மா.... போயிக்கினே இரு". 






சனி, நவம்பர் 16, 2013

சச்சினுக்கு பிரியாவிடை


கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்களின்  மனம் கவர்ந்த சச்சின் டெண்டுல்கர் இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். 16 வயதில் இந்திய அணியில் களமிறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதித்து, வெற்றியுடன் வெளியேறிய போது, மைதானமே எழுந்து நின்று விடை கொடுத்தது. ரசிகர்கள் குறித்து சச்சின் கூறுகையில், உலகின் பல இடங்களிலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் உள்ளார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது," சச்சின்... சச்சின்...' என்ற குரல், எனது இறுதி மூச்சு உள்ளவரை, காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்,'' என்றார். 100 சதங்கள் அடித்த இவரது வசமுள்ள சாதனைகளை முழுவதும் எழுத இன்னும் 1000 பதிவுகள் எழுதினாலும் தீராது.  தனது ஆட்டத்தின் ஆட்டத்தின் மூலம் நம் எல்லோரையும் சந்தோஷம் கொள்ளசெய்த அவருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து விடைகொடுப்போம் 
 கடைசி இன்னிங்க்ஸ் 
  கண்ணீருடன் சக வீரர்களுக்கு  பிரியாவிடை 
 ரசிகர்கர்களுக்கு பிரியாவிடை 

பாரத்  ரத்னா சச்சின் டெண்டுல்கர் புகழ் கிரிகெட் உள்ளவரை  நிலைத்திருக்கும் 

மாடிப்படி

எனது பெயர் மதுசூதனன். எல்லாரும் என்னை...........  ஆமாங்க மது மது,,,,,,ன்னுதான் கூப்பிடுவாங்க. பள்ளிகூட வயதில் ஒருமுறை என் பெயரின் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. அதற்கு காரணம் ஒரு திரைப்பட பாடல். அப்போதைய ஒரு  ஞாயிற்றுகிழமையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான "எதிர்நீச்சல்" என்ற படத்தில் "சேதி கேட்டோ, சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ, மாடிப்படி மாது போயி, மாடிப்படி மாதுவாயி' என்ற பாடலை கேட்ட பிறகு எனது பள்ளி நண்பர்கள் எல்லோரும் என்னை 'மாடிப்படி மாது" என  கிண்டலடிக்க எனக்கு என் பெயர் மீது வெறுப்பாகி விட்டது.


அப்புறமும் ஏன்டா உன் வலைப்பூவுக்கு அதே பேர வச்னுக் கீர கயிதே, கஸ்மாலம்னு  நீங்க திட்டுவது கேட்குது. அதை அப்புறமா இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்போ நீங்க இந்த பாட்டை பாருங்கோ.........






   

அறிமுகம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம். கற்பனை மலர்கள் வலைபூக்களாக  பூத்து குலுங்கும்  தோட்டத்தில்  இன்று முதல்  நானும் செடிகள்  நட தொடங்குகிறேன். உங்களின் பின்னூட்டங்களை  நீராக ஊற்றி, ஆலோசனைகளை  உரமாக இடுவதன்  மூலம் நல்ல நல்ல வலைபூக்கள் உருவாகும் நம்பிக்கையுடன் உங்கள் நண்பன் 
மதுசூதனன்