வெள்ளி, நவம்பர் 29, 2013

சமத்துவ மாடிப்படி

நம்மளோட சின்ன  வயசுல நடந்தத எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியாது என்றாலும் சில விஷயங்கள்  அதுவும் கொஞ்ச காலத்துக்கு பழக்கமாக மாறி பின் மறந்துபோனவை கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கும் இல்லையா.......?

"இப்ப என்னதாண்டா  சொல்ல வர்ற? ஞாபகம் வச்சுக்க முடியாதுன்னும் சொல்லுற. அப்புறம் உடனே ஞாபகம்  இருக்கும்னும் சொல்லுற", அப்பிடின்னு ஒரு சவுண்டு கேக்குது .

சாரி பாஸ், மேட்ருக்கு வர்றேன்.





எனக்கு மாடிப்படிகள்  என்றால் ரொம்ப பிடிக்கும். என்ன காரணம்னு தெரியாது. அனால் எனக்கு பிடித்த சில விஷயங்களில் முக்கியமான ஒன்று மாடிப்படிகள். நம் வாழ்கையின் ஒவ்வொரு சாதகமான  நிகழ்வுகளும் நம்மை  நல்ல நிலைக்கு உயர்த்தும் ஒவ்வொரு படிகட்டுகள் தான். நம்மை  நிலை உயர்த்திக்கொள்ள நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு படிகட்டுகள், அப்படீன்னா லிப்ட்ல மேல போறவன என்ன சொல்ரேன்னு  கேக்கறீங்களா?  அவுங்கள விடுங்க நாம மெதுவா மாடிப்படி ஏறியே போவோம்.




எனக்கு சொந்த ஊரு கேரளாவில் உள்ள ஒரு சின்ன கிராமம். அப்பா சென்னைக்கு வேலை தேடி வந்து செட்டிலாகி   இப்போ சென்னை சொந்த ஊராகி அந்த கிராமம்  தூரத்து சொந்த ஊராகி விட்டது, சரி விஷயத்துக்கு வருகிறேன். பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான்.அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். சென்னையில் வந்து நான் கண்ட முதல் அதிசயம் ஒரு மாடிப்படி. ஊரில் மாடிப்படி உள்ள வீடுகள் மிகவும் குறைவு என்பதாலோ நான் பார்க்காமல் விட்டதாலோ என்னவோ வந்த இடத்தில 5 வயது சிறுவனான எனக்கு  முதன் முதலாக பார்த்த மாடிப்படி அதிசயமாக தோன்றியது.





அப்பா வேலை செய்து கொண்டிருந்த கடை ஓனரின் வீட்டில்தான் நாங்கள் வாடகைக்கு தங்கியிருந்தோம்.முன்புறம் வீட்டு ஓனரின் வீடும் மாடியில் ஒரு வீடும். பின்புறம் ஒரு ஓலைவேய்ந்த வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். பின்புறம் உள்ள எங்கள் வீட்டுக்கு செல்லும் வராண்டாவில்தான் மாடிக்கு செல்லும் வழி. மாடிப்படியின் முடிவில் ஒரு கதவும் அதை தாண்டி ஒரு சிறிய வரண்டாவும் பிறகு  அந்த வீடும். ஆனால் மாடியில் குடியிருந்தவர்கள் பாதுகாப்புகாக மாடி ஏறியதும் உள்ள கதவை சாத்தியே வைத்து இருப்பார்கள். அதனால் அந்த மாடிப்படி ஏறக்குறைய ஒரு சின்ன குகை மாதிரியாக இருக்கும்,  அதன் பிறகு வந்த  நாட்களில் அந்த மாடிப்படியில் தனியாக அமர்ந்து இருப்பதும் படிகளை எண்ணிக்கொண்டே மேலும் கீழுமாய் ஏறி இறங்கி விளையாடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்காக ஆகிப்போனது.





பக்கத்திலேயே இருந்த மாநகராட்சி பள்ளிகூடத்தில் என்னை சேர்த்து விட்டார்கள், அந்த பள்ளியிலும் மாடிப்படிகள் இருந்தது. ஒன்றல்ல இரண்டு மாடிப்படிகள். ஆனால் ஒன்றாம் வகுப்பு கீழ் தளத்தில் இருந்ததனால் அந்த மாடிப்படிகள் இருந்த விஷயம் எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அதாவது நான் இரண்டாவதோ அல்லது  மூன்றாவதோ படிக்கும்போதோதான் தெரியவந்தது, அடா....டா....டா....டா....டா. இது மொதல்லையே தெரியாம போச்சேன்னு வருத்தப்பட்டு அதுக்கப்புறம் அங்கேயும் மாடிப்படிதான் என்னோட தினசரி விளையாட்டு தளமா ஆகி போச்சு.

அந்த சமயங்களில் எனக்கு விளையாட்டு தோழர்கள் யாரும் கிடையாது;பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி  நான் தனியாகத்தான் விளையாடி கொண்டிருப்பேன். ஏன்னா மாடிவீட்டுகாரங்களும் வீட்டு ஓனர் வீட்டுக்காரங்களும்  ரொம்ப வசதியானவங்க. கொஞ்சம் தள்ளியே நிக்கணும்.

சென்னைக்கு நான் வந்து செட்டிலான அந்த வருடம் "மழை வருடம்" போல . சரியாய் சொல்வதென்றால் 1976 நவம்பர் மாதம் சரியான மழை. எங்கள் வீட்டுக்குள்ளும், எங்க வீட்டு ஓனர் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு இடமில்லாமல் எல்லாவரும் நாலைந்து  நாட்கள் மாடி வீட்டில் தஞ்சமடைந்தோம். நான் விளையாடும் அந்த மாடிப்படிதான் எல்லாவருக்கும் சமையல் செய்யும் சமத்துவபுரமாக  மாறியிருந்தது. நான் மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்கும் நாட்கள் அவை. ஒருவேளை இயற்கை எங்கள்  எல்லோரையும் சரிசமானமாக மாற்றிய  அந்த சின்ன வயது சம்பவம்தான் நான்  மாடிப்படிகளை விரும்புவதர்க்கு காரணமோ என்னவோ.................. ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது