திங்கள், மார்ச் 31, 2014

முட்டாள்கள் தினம் உருவான கதை

முன்னொரு காலத்தில் மேற்கே ஏழு கடல் ஏழு மலை தாண்டியுள்ள அமாரிகோ என்ற ஒரு ஊரில் (ஊர் பெயர் உதவி-மூன்றாம்சுழி அப்பாதுரை அவர்கள்) கிளின்டன்வர்மன் என்றொரு அரசன் இருந்தான்(எந்த ஊரில் நடப்பதாக இருந்தாலும் தமிழ் கதைகளில் ராஜாவுடைய பெயர் வர்மன் என்றுதான் இருக்கும் அதனால் மேற்கொண்டு தகராறு எதுவும் பண்ணாம கதைய படிங்க). ராஜாவும் ராணி ஹிலாரியம்மாவும் நல்லாட்சி புரிந்துவந்த  நேரத்தில் அந்த ஊருக்கு கிழக்கே பாரதம் என்ற ஊரிலிருந்து ஒருவன் சாப்ட்வேர் 
எஞ்சினீயர் என்ற உருவத்துடன் வந்து சேர்ந்தான்.

அவனது பெயர் லபக்தாஸ். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது Lord. இர்வின், Lord. மவுண்ட் பேட்டன், Lord. வெலிங்க்டன் இவுங்களப் பத்தியெல்லாம் படிச்சிட்டு அவுங்கள மாதிரி பெரிய ஆபீசரா ஆகி தன்னோட பேருக்கு முன்னாடியும் Lord பட்டத்தை சேர்த்திட்டு லபக்தாஸ் என்ற தனது பெயரை Lord லபக்தாஸ் - னு மாத்திக்கணும் என்பதுதான் அவனது ஒரே இலட்சியம்.
 
"டுபாகூர் ஈஸ்ட்" என்ற சாப்ட்வேர் கம்பெனியில் ஆன்சைட் அசைன்மென்ட் வேலைக்காக நம்ம லபக்தாஸ் அமாரிகோவின் வாஷிங்க்டபுரத்துக்கு வந்திருக்கிறான். இவரப்பத்தி சொல்லணும்னா, இவர் நம்ம கோயமுத்தூர்காரர். அதனால  கொஞ்சம் குசும்பு அதிகம் (கொஞ்சமா........ ? அதிகமா..........? சரியாய் சொல்லு என கேட்டால் - ரொம்ப அதிகம் போதுமா). கூட வேலை பார்க்கும் அமரிக்கோ  ஊருக்காரங்க எல்லாரையும் எப்பவும் ஏதாவது சிக்கல்ல மாட்டிவிட்டு அவுங்க படும் அவஸ்தையை நல்லா பாத்து ரசிப்பதுதான் இவரோட முக்கிய பொழுதுபோக்கு.

கூட வேலை செய்யும் மற்ற பணியாட்களின் e-mail பாஸ்வேர்டை திருடி அவர்களுடைய e-mail மூலமாக உயரதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதாசி (அடேய்.....பாவி அதுக்குப்பேர்  e-mailடா) அனுப்பி அவுங்களோட அப்ரைஸலுக்கு வெட்டு வைப்பது, அடுத்தவனோட ID கார்ட திருடி அதுக்கு பதிலா தன்னோட ID கார்ட வச்சிட்டு, திருடின ID கார்ட தேச்சிட்டு வெளியே வந்து ஊர்சுத்த சென்றுவிடுவது, மீட்டிங் ரூம் கதவில் "இந்த அறைக்கு உள்ளே நடைபெறும் கசமுசா" என கண்டபடி எழுதிவைப்பது. இதெல்லாம் சும்மா சின்ன சின்ன சாம்பிள்தான்.  

ஆபீஸில் வேலை செய்யும் அத்தனை அமாரிகோ பயலுகளுக்கும் லபக்தாஸோட இந்த மாதிரியான சேட்டைகளை தாங்க முடியவில்லை. இவனால் பாதிக்கப்பட்ட எல்லாரும் ஒண்ணா கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது முள்ளை  முள்ளால் எடுப்பது / இத்தனை நாள் அவன் தங்களுக்கு கொடுத்த மருந்தை அவனுக்கே கொடுப்பது /பழிக்குப்பழி என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சரியான சமயம் பார்த்து 
திட்டத்தை செயல் படுத்தினாங்க. அன்று ஒரு மார்ச் 31 தேதி. அவுங்க எல்லாரும் HR Dept. மெயில் IDயை ஹேக் செய்து நம்ம லபக்தாஸுக்கு அனுப்ப இருந்த சம்பள ரசீதில் நான்கு பூஜியத்தை கூடுதலா சேர்த்து விட்டனர். மறுநாள் காலை ஆபீஸுக்கு வந்த நம்ம லபக்தாஸ் மெயில பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
 
சென்னை டைடல் பார்க் பக்கத்துல 10 ஏக்கர் நிலம் வாங்க  போதுமான பணம் கிடைத்ததை அறிந்த லபக்தாஸ் ஆன்லைன்ல பேங்க் வெப்சைட்ல தனது அக்கவுன்ட்ட கூட பார்க்காமல் அற்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி ஒரு நொடியில் மொத்தமா மாறிபோயிட்டான். எப்பவும் திட்டிகொண்டிருந்த மேனேஜர் முன்னாடி போயி நின்னு அவரை கன்னா பின்னான்னு திட்டத்  தொடங்கினான். அன்னைக்கு விசிட்டுக்கு வந்த கம்பெனி M.D கிளிண்டன் வர்மன் மகாராஜாவையும் அவன் விட்டுவைக்கவில்லை. எதாவது பண்ணி கம்பெனியை விட்டு எஸ்கேப் ஆகணும் என்பதுதான் அவனோட திட்டம். 
 
கடைசியில் ஒரு வழியாக சண்டைய போட்டு முடிச்சு, விட்டா போதும்னு ஒரே ஓட்டமா வெளியே ஓடி வந்துவிட்டான். ஏர்போர்ட் பக்கத்தில ஒரு கவுண்டரில் தனது பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தவுடன் "அப்பிடியே ஷாஆஆஆஆஆஆக்க்க்க்க்க்க்க்க்க்க்" ஆயிட்டான். பைத்தியம் புடிச்ச குரங்கினை தேளும் கொட்டியதுபோல் ராஜாவ திட்டிய குற்றத்துக்காக கைதும் செய்யப்பட்டான். 
 
ஆனா நம்ம ராஜா ரொம்ப நல்லவர். நடந்ததை எல்லாம் கேட்டவுடன் அவர் பரிதாப நோயில் வீழ்ந்தார். இரண்டு பக்கத்தினரின் நியாமான நிலையினை புரிந்து கொண்ட அவர் சம்பவம் நடந்த அந்த நாளை முட்டாள்கள் தினமாக அறிவித்தார். இனி எல்லா வருடமும் ஏப்ரல் ஒன்றாம் தேதி யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என சட்ட திருத்தத்தை (இபிகோ - இருநூற்றி நாப்பத்தி எட்டுன்னுன்னு ஞாபகம், சரியா தெரியல) கொண்டுவந்து அதை உடனே தண்டோரா போட்டு அறிவிக்க உத்தரவிட்டார். 

எப்படியோ தண்டனையிலிருந்து தப்பித்து ஊர் திரும்பிய நம்ம லபக்தாஸுக்கு மட்டும் இன்னும் பைத்தியம் தெளியவில்லை. அவன் இப்போது யாரையும், ஏப்ரல் ஒன்றாம் தேதியா இருந்தா கூட ஏமாத்துறதில்லை.


ஞாயிறு, மார்ச் 30, 2014

பக்தி பரவசமாக ஒரு பாடல் ..


இந்த வலைப்பூ தொடங்கியதிலிருந்தே இசை எனும் தலைப்பில் இந்த பாடலை பதிவு போடவேண்டும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். இது எனக்கு பிடிச்ச பாடல் மட்டுமல்ல. நான் முதல் முதலா கேட்டவுடன் பிடிச்சதுமான பாடல். நான் பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். ஊரில் இருந்த போதே இந்த பாடலை கேட்டிருக்கேன். சென்னைக்கு வந்த பிறகு முதன் முதலா தியேட்டருக்கு சென்று பார்த்த திரைப்படத்தில் இதே பாடலை அதுவும் இரண்டு மூன்று வருடம் கழித்து மீண்டும் கேட்டதால் மனசில் அப்படியே பதிந்து விட்டது என நினைக்கிறேன். மனதை வருடும் மெல்லிய இசை பாடல் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி சீராக செல்வதை கவனியுங்கள். இங்கே பதிவில் போட்டிருப்பது மலையாள பாடல். படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்திருப்பதால் நீங்கள் இதே பாடலை நிச்சயமா தமிழிலும் கேட்டு இருப்பீங்க. வீடியோவில் அந்த சின்னப்பெண் தன்னிரு கைகளைகூப்பி தலைக்குமேல் உயர்த்தி கும்பிட்டபடியே "ஐயப்ப சுவாமி, ஐயப்ப சுவாமி" என பாடும்போது பக்தி பரவசமாக உணர்வீர்கள்.

பாடலை பாடியவர் - அம்பிளி, இசை - தேவராஜன் (மலையாள சினிமாவின் மெல்லிசை மன்னர்), பாடலை இயற்றியவர் - வயலார் ராம வர்மா. படம் - சுவாமி ஐயப்பன்.






 

திங்கள், மார்ச் 24, 2014

படித்தபடி...... ரசித்தபடி..... சிரித்தபடி..... 2

ஆண் : "ஹலோ"

பெண் : "செல்லம், நான்தான். இன்னும் GYM - லதான்  இருக்கீங்களா?

ஆண் : "ஆமா, என்ன விஷயம்"

பெண் : "ஷாப்பிங் பண்ணிட்டு வர்ற வழியில சும்மா பாக்கலாமேன்னு Benz கார் ஷோரூமுக்குள்ள போனேன். SL550 - 2014 மாடல் கார். பாத்து கண்ணு பூத்துபோச்சு. ஏன்னா அழகு. வச்ச கண்ண எடுக்க முடியல. ஒண்ணு புக் பண்ணிடவா....?

ஆண் : "எவ்வளவு ஆகும்....?"

பெண் : மாசம் 2,20,000/- EMI, ஜஸ்ட் 5 வருஷத்துக்கு. நம்ம ஜாயிண்ட் அக்கவுண்ட்ல லோன் கூட ஓகே ஆயிடுச்சு.

ஆண் : "உன் இஷ்டம். முழுப்பணமும் லோனாவே குடுபாங்களான்னு கேட்டுக்கோ?"

பெண் : "செல்லம்னா....செல்லம்தான். உம்ம்ம்மா.........ஐ லவ் யூ டா.........எங்க நீ சம்மதிக்க மாட்டியோன்னு நெனச்சேன். இன்னிக்கிதான் என் வாழ்கையில ரொம்ப சந்தோஷமான நாள். தாங்க்ஸ்டா. லோன் டாக்குமெண்டேஷன முடிச்சிட்டு அப்பறமா பேசுறேன். பை டியர்......"

ஆண் : "பை, ஐ லவ் யூ டூ "

ஆண் போனை வைத்தான். GYM ல இருந்த அனைவரும் அவரை அதிசயமாகவும் கொஞ்சம் பொறாமையுடனும் பார்த்தனர். கையிலிருந்த மொபைல் போனை உயர்த்தி பிடித்தபடி அவன் கேட்டான். "யாருதுப்பா இந்த மொபைல்.....?"


.


 



ஞாயிறு, மார்ச் 23, 2014

பாப்கார்னின் குணநலன்கள்

எந்த தியேட்டரா இருந்தா என்ன? என்ன படமா இருந்தா என்ன? இடைவேளை சமயத்துல நாம எல்லாரும் வாங்கி சாப்பிடுற ஒரு முக்கியமான நொறுக்கு தீனி பாப்கார்ன்தான். இது உங்க நேரத்த போக்கறதுக்கு மட்டுமான சிற்றுணவு (SNACKS-சரியா ..?) மட்டுமல்ல. உங்களது ஆரோக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான அநேக ஊட்டச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது.  
 
கொழுப்பு குறைந்த, அதிக நார் சத்துக்கள்  அடங்கிய பாப்கார்ன் ஒரு உன்னதமான பொருள் என்பது முன்னமே அறிந்த ஒரு உண்மையாகும். ஆனால் அறிவியலாளர்கள் பாப்கார்னின் கூடுதலான பலன்களையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளவற்றை காட்டிலும் அதிக சத்துக்கள் பாப்கார்னில் இருக்கின்றதாம். 
புற்றுநோய், இதயநோய், மறதிநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க பாப்கார்ன் பெரிதும் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள ஆன்ட்டி ஆக்ஸைடன்ட் (Antioxidant) என்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. மேலும் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை உடலுக்குள் வராமல் தடுக்கும் போளிபெனோல்ஸ் (Polyphenols) நிறைந்தது.
 
மற்ற தின்பண்டங்கள் போன்று இல்லாமல் முழுவதும் மக்கா சோளம் தானியம் மட்டுமே உபயோகித்து பாப்கார்ன் செய்யப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு நபருக்கு தேவையான தானிய சத்தின் 70 சதவிகிதம் கொடுக்க பாப்கார்ன் உதவுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இது மிகச்சிறந்த ஒரு தானிய உணவு.
பாப்கார்னில் இயல்பாக சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை பரிந்துரைக்கப்பட்டாலும், இப்போது விற்கும் பாப்கார்ன் தேங்காய் எண்ணெய், கேராமல், சாக்லேட்டு போன்றவற்றைச் சேர்த்துச் செய்வதால் அவை பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும்.  

 

  

 

 

 

 

 

 

 

 

 
 




 

 

 
 



 

.

வெள்ளி, மார்ச் 21, 2014

விடுகதை

இதோ உங்கள்  மூளைக்கு வேலை கொடுக்க சில நவீன விடுகதைகள்
(குறிப்பு - எல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தமானவை)

1. தொட்டால் வாடும் பூ தொடாமல் மலரும் பூ.
2. கொக்கிபோட்டு இழுத்தால் கூட கூட வந்திடும்.
3. அத்தையை பார்த்ததும் நோய் சுத்தமாய் தீர்ந்தது.
4. கூன்விழுந்த கிட்டப்பாவை குழியில தள்ளிவிட்டாச்சு.
5. ஒருவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஜன்னல் படியில்
6. இரும்பில் செய்யாத சாவி, துருபிடிக்காத சாவி
7. காப்பாத்த நான் வேண்டும். அனாலும் என்னை யாருக்கும் பிடிக்காது
8. நூற்றியொரு படிகள் ஏறி போனேன். ஊரெல்லாம் சுத்தி வந்தேன்.
9. எலி வீரனுக்கு முதுகில் தீ.
10. இதனை தொட்டால் மறையும் திரை
11. பட்டனை தட்டினேன். சேதி போய் சேர்ந்தது
12. அந்தகால  பயில்வான், இந்தகால நோஞ்சான்.



விடைகள் கீழே ................












1. ஸ்கிரீன் சேவர்
2. மவுஸ் பாயிண்டர்
3. ஆன்ட்டி வைரஸ்
4. ரிசைக்கிள் பின் FILES
5. விண்டோஸ்
6, பாஸ்வேர்ட்
7. ரிஸ்டார்ட்
8. கீ போர்ட்
9. ஒப்டிக்கல் மவுஸ்
10.குளோஸ் பட்டன்
11.ஈ மெயில்
12.மானிட்டர் (இப்ப FLAT)

புதன், மார்ச் 19, 2014

நினைவிருக்கட்டும்...

 



நீதிமான்களும் குற்றவாளிகளும் 
இடம் மாறி நிற்கும் 
வித்யாசமான நீதிமன்றம் இது  
பதில்தர முடியாத 
கேள்விக்கணைகள் தொடுத்து 
இரண்டுபக்கம் கூரான வாளினால்
உங்கள் முகவரியின் தலையறுக்க
ஆனந்தத்தின் அகலப்பாதையில்
ஏமாற்றங்களின் படிகள் ஏறிக்கடந்து
நம்பிக்கையின் விடியலை நோக்கி

நான் வருவேன்.......
 

செவ்வாய், மார்ச் 18, 2014

மாடிப்படி வாஸ்து

எனக்கு வாஸ்து சாஸ்திரம் என்ற வஸ்துவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது மாடிப்படி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் என்பதாலும் இந்த பதிவு.
 
 
 
இப்போது கட்டும் வீடுகள் பெரும்பாலும் அடுக்குமாடிகள் என்பதால் மாடிப்படிகள் முக்கியத்துவம் பெறுகிறது. மாடிப்படிகள் பல்வேறு வடிவங்களிலும், சிமெண்ட், இரும்பு அல்லது மரத்திலான படிகளாகவும் கட்டப்படுகிறது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மாடிப்படியின் அமைப்பு வாஸ்து சாஸ்திர அமைப்புடன் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.  
 
 
மாடிப்படிகள் ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நிர்ணயம் செய்கின்றது என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா..?
 
 
சீன வாஸ்து சாஸ்திரம் பெங் சுயி நிபுணர்களின் கருத்துப்படி மாடிப்படிகள் வீட்டின் வாஸ்து தோஷத்தை கொடுப்பதில் / நீக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
  

மாடிப்படிகள் எப்போதும் வீட்டின் மேற்கு திசையிலும் தெற்கு திசையிலும் மட்டுமே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மாடிப்படிகள் அமைப்பது தோஷமாக மாறி உங்களுக்கு பண நஷ்டங்கள் ஏற்படுத்தி விடலாம்.

மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் "0" என முடியும் எண்ணிக்கையில் அதாவது10, 20, 30 என இருக்கக்கூடாது  

சுழல் மாடிப்படிகள் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கலாம் என்பதால் தவிர்க்கவும் 

உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்.


மாடிபடிக்கு கீழே குளியலறையோ, சமையலறையோ அல்லது பூஜை அறையோ அமைக்க கூடாது.



வீட்டின் நடுவே மாடிப்படி வைப்பது சரியானதல்ல என்றாலும் அதனால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறு வைக்கும் மாடிப்படியில் சரியான வளைவுகள் இல்லையென்றால் விபரீதமான பலன்களை கொடுக்கும். மாடிபடிகளுக்கு மேற்புறம் மின்விளக்கு அமைப்பதும் கூடாது.

 



 

புதன், மார்ச் 12, 2014

பாசவலை

ஆதரவின்மை என்ற துன்பச் சிறையுண்டு
அதனைக்கண்டு கலங்கும் மனமுண்டு 
கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கும்போது
கொஞ்சமாவது கண்கலங்க தோன்றுகின்றது 
துக்கம் புயலென தாக்கும்போது 
நெஞ்சு விம்மி வலிக்கின்றது.
நினைவுகளில் மட்டுமே இனி என்பதை மறந்து 
திரும்பிவர எத்தனிக்கையில் 
கொழுந்துவிட்டு எரியும் தீ தடுக்கின்றது 
மறந்திடுவாயோ என்றெண்ணும்போது 
உடலைவிட அதிகமாய் உள்ளம் தகிக்கின்றது
விட்டுச்செல்லும் உறவுகள்
தீர்ந்து போன சோகங்கள்
அடுத்த ஜென்மத்திலாவது 
எதுவும் அறியாமல் எதற்கும் ஆசைபடாமல்
சொந்தங்களின் பந்தச்சிறையில்
அகபட்டுக்கொள்ளாமல் இருக்க 
எதையும் தாங்கும் இதயமொன்று கொடுத்தருள் இறைவா
என்பதே சாம்பலாய் மாறும்வரை 
இருக்கும் மிச்சநேர பிரார்த்தனை
என்னதான் இருக்கட்டுமே
மண்குடத்திலிருந்து நீரில் விழுந்து 
கலந்து சங்கமிக்கும் போதுதான் அமைதி 
இல்லையென்றால் அடங்காத அந்த பாசம் 
இந்த சாம்பலை உயிர்த்தெழ செய்தாலும் செய்திடும்  

 

கேள்விக்கென்ன பதில்?

உங்களிடம் ஒரு குழப்பமான கேள்வி கேட்கட்டுமா..................?

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். உங்கள் குழப்பத்தை குறைத்திட உதவியா அவங்க பெயர் ராமு, சோமு, பாலு என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் ராமு பிறவியிலேயே பார்வையற்றவன்.சோமுவுக்கு சுத்தமா காது கேட்காது. மூன்றாமவன் பாலு பிறவி ஊமை.
 
மூணு பேரும்  சேர்ந்து வியாபாரம் பண்ணி நல்லா சம்பாதிச்சு ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குருடன் ராமு சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அவனுக்கு தெரியாம (??) திருடிக்கொண்டு செவிடன் சோமு எஸ்கேப் ஆகுறான்.  
ஏதேச்சையா அந்தப்பக்கம் வந்த பாலு (ஊமை) இதை பார்த்துட்டான். சைகை காட்டி கூப்பிட்டு உதவி கேட்க பக்கத்தில வேற யாருமே இல்லாத காரணத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் எப்படி தன் நண்பன் ராமுவுக்கு பணப்பை திருடு போன விஷயத்தை சொல்லுவான்? இதுதான் அந்த கேள்வி.
 
இதே கதை கொஞ்சம் பெரிய, சிறிய வித்தியாசங்களுடன் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் கேள்வி  மட்டும் பொதுவானது. பிறவியிலேயே வாய்பேச முடியாத ஒருவர் எப்படி ஒரு குருடனிடம் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பான்?
 
மிகச்சரியான விடைதான் வேண்டும் என்று கேட்கவில்லை. கண்டிப்பாக பல விடைகள் கிடைக்கலாம். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் வேறு கருவிகளை உபயோகிக்காமல் ஊமையான பாலு தன் நண்பனுக்கு உதவ முடியுமா? என்பதுதான் என் கேள்வி!
 
இந்த கேள்விக்கு என்னவெல்லாம் பதிலாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்