செவ்வாய், டிசம்பர் 31, 2013

இரண்டாயிரத்து பதிமூன்றும் இரண்டாயிரத்து பதிநான்கும்

சிதைந்து போன சணல் சாக்கு துணியால் மூடிய தனது உளுத்துப்போன உடலில் முதுமை தந்த சுருக்கங்கள் நிறைந்திருக்க, கால விருட்சத்தின் விழுதினை பற்றி பிடித்தபடி தன்னந்தனியாக வந்து அமர்ந்தான் அவன். ஒளிவீசிக்கொண்டிருந்த நிலவை மூடி மறைக்க விரைந்து சென்றுகொண்டிருந்த கருமேகக் கூட்டங்களை தன் இடுங்கிய கண்களால் வெறித்துப் பார்த்தான். எதையோ நினைத்தபடி ஒரு கல்லெடுத்து தன்னருகில் இருந்த கலங்கியிருந்த குளத்தில் எறிந்தான். இளகிய குளத்தில் நிலவின் பிம்பம் துண்டு துண்டாக சிதறியது.

"யாரது"...? என அசரீரியாக வந்த கேள்விக்கு "நான்தான் இரண்டாயிரத்து பதிமூன்று", என பதில் சொல்லும்போதே வாயில் மிச்சமிருந்த கடைசி பல் சிதைந்த ஈறுகளை பிய்த்துக்கொண்டு உதிர்ந்தது. தொண்டையிலிருந்த நாள்பட்ட சளியுடன் சேர்த்து  அதனை குளத்தில் துப்பினான். அகோர பசியுடன் இருந்த மீன்களின் கூட்டம் ஒன்று அதை தின்ன வேகமாக நீந்தி வந்ததை பார்த்து அதிர்ந்தான்.


மனதை கவ்வியிருந்த கவலைகளும், அதை தீர்க்க முடியாமல் போன தனது இயலாமையும் தந்த பயம் அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது. முகத்தில் விழுந்திருந்த நீண்ட சடைமுடி கொத்தான மண்புழுக்களைப் போல் காட்சியளித்தது.


"ச்சே, எவ்வளவு ஆர்பாட்டமா, கொண்டாட்டமா இருந்தது நான் பிறந்து வளர்ந்த நாட்கள், என் பயணங்கள், ஹ்ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்", தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். "இப்ப ஒண்ணுக்கும் லாயக்கில்லாத உதவாக்கரையா ஆகிவிட்டேனே. ஒருத்தனும் மதிக்க மாட்டேங்கிறானே. சின்னப்பயலுக கூட என்ன பாத்தா ஓடிபோறாங்களே", கன்னத்தில் கை வைத்தபடி புலம்பினான்.


ஊதக் காற்று வீச ஆரம்பித்து அவனது வேதனையை இன்னும் அதிகமாக்கியது. இன்றைய பொழுதை கழிக்க எதாவது ஒரு வீட்டில் இடம் கிடைக்குமா என தேடத் தொடங்கினான்.எக்குத்தப்பா ஏதோ ஒரு வீட்டு கதவை தட்டி ஏதாவது இளம் ஜோடிகளின் ஏச்சுக்கு ஆளாகி விட்டாலோ என்ற சிந்தனை அவன் வயிற்றைக்  கலக்கியது.


"ஐயோ அம்மா முடியலையே, ரொம்ப களைப்பா இருக்குதே. இன்னிக்கு இதுக்கு மேல ஒரு அடி கூட நடக்க முடியாது. "இந்த நாள்காட்டியில இருக்குற 365 நாளுல கொஞ்ச நாட்களைக் கொறசுக்க கூடாதா?..அப்பவாச்சும் கொஞ்சம் பேருக்கு கொண்டாட்டத்தோடு மகிழ்ச்சியும் கிடைக்குமே?.."


தனது கோபங்கள், வருத்தங்களை மறைக்கும் முயற்சியாக, அவன் சத்தம் போட்டு சிரித்தான்,கர்ஜித்தான்.இரவின்அமைதியை கிழித்துச் சென்ற அந்த அலறலில் சாலையின் இருமங்கிலும் இருந்த வீட்டு சுவர்களும்,மேல் கூரைகளும் அதிர்ந்தன. வீட்டிலிருந்த குழந்தைகள் பயந்து தங்கள் தாய் தந்தையரிடம் ஓடி தஞ்சமடைந்தனர்.குலுங்கிய மரத்தின் கிளையில் தொற்றிக்கொண்டிருந்த கடைசி இலையும்உதிர்ந்து விழுந்தது.  எல்லாவரும் கைவிட்டபோதும் அவன் தனது கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையை கொஞ்சமும் விடவில்லை. 


சாலை முடிவில் இருந்த வீட்டில் "இரண்டாயிரத்து பதினான்கை" வரவேற்க வைத்திருந்த வரவேற்பு வளையம் பொன்னிற ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. "நீ இன்னும் கனவுலகிலேயே இருக்கிறாய். இரண்டாயிரத்து பதினான்கு எங்களது எல்லா ஆசைகளையும் லட்சியங்களையும் நிஜமாக்க வருகிறது, அவனுக்கு வழியை விட்டு நீ கிளம்பு தம்பி, காத்து வரட்டும்". காலையில் தன்னைப்பார்த்து ஒரு இளைஞன் சொன்ன ஒரு சிறந்த நகைச்சுவையை நினைத்து மீண்டும் சிரித்தான்.  


"அட முட்டாள் பயல்களா, எது உங்க ஆசைகளையும் , லட்சியங்களையும் எல்லாம் வல்ல இரண்டாயிரத்து பதினான்கு நிறைவேற்றிடுமா? இப்படி சொல்லி சொல்லித்தானே என் உடம்ப ரணகளப் படுத்தினீங்க? இன்னுமா?.... காய்ச்சு சொரி பிடிச்சு என் உள்ளங்கை ரேகையெல்லாம் அழிஞ்சு இப்ப எனக்கே என்னோட எதிர்காலம் என்னன்னு கணிக்க முடியல. நான் வரும்போதும் நல்லதத்தானடா  சொன்னேன். அதை யாரும் கேட்காம என்னோட இந்த தள்ளாத வயசில உங்களுடைய எல்லா தவறுகளுக்கும் என்னையே குற்றம் சொல்லுறீங்களே? இது நியாயமா?....


பதிலேதும் வரவில்லை. மரணம் இன்னும் சில மணித்துணிகளுக்கு முன்னே தென்பட எல்லாவற்றையும் பெரும் வேதனையுடன் பொறுத்துக் கொண்டு அவன் மெல்ல நடந்து இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டை அடைந்தான். கால்கள் தளர தளர இருதயம் எப்போதையும் விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது. உடலில் மிச்சமிருந்த எல்லா சக்தியையும் ஒன்றிணைத்து அவன் இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டுக்கதவை தட்ட தன் கையை உயர்த்தினான். ஆனால் அடுத்த வினாடி வானில் இருந்து விழும் மழைத்துளி மண்ணைத் தொடும் முன் பனிக்கட்டியாய் ஆனது போல உறைந்து தரையில் விழுந்தான். 


வீட்டின் உள்ளே யாரோ பாடுவது  கேட்டது. மனம்  மயக்கிய அந்த பாடலை தெளிவாக கேட்க விரும்பி அவன்  தனது தசைநார்களை முறுக்கியபடி மெல்ல நகர்ந்தான். "அடடே இது என்னோட விருப்பமான பாட்டல்லவா?, காதலில் மூழ்கி மதிமறந்து நான் இளமை ராகத்தில் பாடிய பாட்டல்லவா? என் காதலின் பெருமையையும் அதை கைகூடாமல் செய்த நயவஞ்சகர்களைப் பற்றியும் சொல்லும் பாட்டல்லவா?  

அந்த ஆனந்தப் பாடலை தெளிவாகக் கேட்க விரும்பி நத்தை போல் ஊர்ந்து சென்று வீட்டு சுவற்றில் தனது காது பதித்து அமர்ந்தான். இப்போது பாடல் தெளிவாக கேட்டது, கண்ணை மூடியபடி அந்த பாடலை ரசித்தான். கேட்க, கேட்க அவனுக்கு தனது வாழ்கையின் இனிமையான தருணங்கள் ஒவ்வொன்றாக  நினைவுக்கு வர கண்ணிலிருந்து தரைதாரையாக கண்ணீர் பெருகி வழிந்தது, வானத்து மேகங்களும், நட்சத்திரங்களும் பார்த்துகொண்டிருக்கும்போதே அவன் மெல்ல மெல்ல கரைந்து மறையத் தொடங்கினான். வீசிய  குளிர்க்காற்றில் அவனது கண்ணீர் துளிகள் உறைந்து இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டு ஜன்னல் மற்றும் வீட்டு முற்றத்தில் இருந்த பூந்தோட்டத்தில் வெண்பனியாக வீழ்ந்து கொண்டிருந்தது.   

சனி, டிசம்பர் 28, 2013

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 1


காதல் அரும்பிய(மாடிப்)படி 


டைடானிக் படத்தில் ரோஸ் & ஜேக் காதல் அரும்பியபடி

====================================================

புரட்சி தலைவர் ஆணையிட்ட(மாடிப்)படி 



எங்க வீடு பிள்ளை படத்தின் இறுதிக்காட்சியில் இதே மாடிப்படியில் இரண்டு வேடங்களில் புரட்சி தலைவர் இறங்கி வருவது செம ஸ்டையிலாக இருக்கும்.

 

புதன், டிசம்பர் 11, 2013

11.12.13 @ 14.15.16 hrs





2012ம் ஆண்டு தொடங்கி முடியும் வரை மாயன் நாள்காட்டியை பற்றியும் உலக அழிவு  பற்றியும் பல பதிவுகள் படிக்க வாய்ப்பு கிடைத்தது.உள்ளூர் நாள்காட்டிகளையே பாக்க அப்ப நேரம் இருந்தது இல்லை, ஆனால் மாயன் நாள்காட்டி என்ன  சொல்லுதுன்னு பார்க்க, கேட்க, படிக்க ரொம்ப ஆர்வம் இருந்தது உண்மைதான். 


இப்போது முகநூல் மற்றும் மின்னஞ்சல்களில் சமீப காலங்களில் தேதிகள் குறித்த பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த மாதம் (டிசம்பர் 2013) ஐந்து ஞாயிற்றுகிழமை, ஐந்து திங்கள்கிழமை மற்றும் ஐந்து செவ்வாய்கிழமை வருவதாகவும் இதுபோல் இனி 834 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த மாதிரி வரும் என்றும் பல பதிவுகள். கீழே உள்ள படம் சொல்வது என்னவென்றால் இதுதான் இந்த நூற்றாண்டின் கடைசி FANCY நம்பரா வரும் தேதியாம். நல்ல காமெடி இல்ல.



இதேபோல் போன வருடம் 12.12.12 தேதி, அதன் முந்தைய வருடம் 11.11.11 தேதி, சீனர்களின் அதிர்ஷ்ட நாளாக 2008ம் ஆண்டு வந்த 08.08.08 தேதி என பல தகவல்கள். 



 


அனால்  இது வெறும் தேதி, கிழமை மற்றும் எண்களால் வரும் மாயை மட்டுமே. இந்த வருட நாள்காட்டியில் உள்ள தேதி மற்றும் கிழமைகள் எல்லாம் ஆறு ஆண்டுக்கு பிறகு அதாவது 2019 ஆண்டு நாள்காட்டியில் உள்ள தேதி மற்றும் கிழமைகள் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும். இதே போல் அடுத்த வரும் வருடங்களிலும் 2-2-22, 22-2-22, 3-3-33, 4-4-44, 5-5-55 என ஏகப்பட்ட தேதிகள் வருமில்லையா? 



இந்த விஷயத்தை ஒரு வித்தியாசமான தேதியில் பதிவு செய்யலாம் என முடிவு செய்து இன்றைய தேதியை தேர்தெடுத்தேன். இன்றைய தேதியில் அப்படி என்ன விஷேசம் என்று  கேட்கிறீர்களா?.............

எல்லா நாள்காட்டியையும் நல்லா பாத்துட்டேன். இந்த தேதியும் சரி, வேற எந்த தேதியாக இருந்தாலும் சரி ஒரு தடவை விட்டு விட்டால் அந்த  தேதி 834 வருஷத்துக்கு பிறகு மட்டுமல்ல. என்னைக்குமே திரும்ப வராதுங்க........... 






இப்ப தலைப்ப இன்னொரு தரம் படிங்க  11.12.13 @ 14.15.16 hrs

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

வ(ப)டிவேலு




வடிவேலு மீண்டு(ம்) நடிக்க வந்திருக்கார். அவரது புதிய படம் பொங்கலுக்கு வருதாம். நியூஸ் படித்தேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. இருக்காதா பின்னே?...எவ்வளவு நல்ல நகைச்சுவை நடிகர். படத்துக்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலக்குவாரே....ரொம்ப நாள் கழித்து ஒரு படம் வரப்போகுது. அட யாரப்பா அது "வரூ...........ம்..........ஆனா வராது"......ன்னு அவரோட காமெடி டயலாக்கயே இழுக்கறது. கண்டிப்பா வரும் நம்புங்கப்பா.

இவரை எப்படி என் வலைபூச்சரத்தில் இடம் பெற செய்வது என்று சிந்தித்தபடியே கழிவறையில் நான் அமர்ந்திருக்கும் பொது கண நேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த பதிவு யோசனை. எப்படி என் ராஜதந்திரம்.

வடிவேலு நடித்த ஒரு படத்தை பற்றிய ஒரு பதிவு இது. என்ன படம் என்று மேலே கொடுத்துள்ள க்ளூவை வைத்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பரிசு.


உங்கள்  ஊகம் சரிதான். படத்தின் பெயர் இம்சை அரசன் 23ம் புலிகேசி. படம் வந்த நாள் முதல் இந்த நாள் வரை பலமுறை பார்த்த படம் என்றாலும் பதிவு எழுதுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பொதுவா இவரோட காமெடி எல்லாமே சூப்பரா இருக்கும். இந்த படத்தில பட்டய கெளப்பும்.

கமண்டலத்தையும் கும்பாவையும் வழியிலே வைத்த பூசாரியை திட்டுவதில்  தொடங்கி வரிசையாக ராஜகுலோ..........த்துங்குவை விட்ட வாயிற்காவலன், கத்தியை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்த மங்குனி அமைச்சர், மேலே பராக்கு பார்த்தபடி நின்றதால் கைநழுவிப்போக இருந்த பீற்றிக்கொள்ளதக்க அரசாங்க உத்தியோகம் பார்க்கும் காவலாளி, அக்காமாலா மற்றும் கப்ஸி குளிர்பான செய்முறைகளை ஒட்டுக்கேட்டு வாந்தி எடுப்பவன், தங்கக் கிணறு மெகா ப்ரொஜெக்டில் நின்றபடியே உறங்குபவன் மற்றும் எல்லா லகுட பாண்டிகளுக்கும் சரமாரியாக வழங்கும் மூக்குபொடி தண்டனை, மிளகாய் பொடி தண்டனை, மொட்டை மாடி வெயிலில் அம்மணமாக நிறுத்துதல், மீசையை மூக்கில் விட்டு மூளையை குழைத்து விடும் தண்டனை போன்ற மிகவும் அபாயகரமான (?.) மற்றும் உடனடி தண்டனைகள்.




இவையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் உடனே இந்த புலிகேசி மன்னர் விவரமில்லாதவர் என்று முடிவுசெய்து விடாதீர். ஏனெனில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் பற்றி மிக தெளிவாக அறிந்தவர், மண்டைக்கு மேல் முடி இருந்தால் போதாது மதி வேண்டும் என்ற விவேகம் தெரிந்தவர்,அரண்மனை வாசல்வரை வந்துவிட்ட மிகப்பெரிய போரை தனது சாமர்த்தியத்தால் நிறுத்தி சமாதான வெள்ளை கோடிக்கு புதிய அர்த்தம் கொடுத்தவர். சிறையில் தன் கையை கட்டி இருப்பது போர்க்கருவிகள் செய்யும் கொல்லன் செய்த சங்கிலி என்ற உண்மை அறிந்ததும் அதை அனாயசமாக அறுத்து வீசும் பலம் பொருந்தியவர்.



எல்லாவற்றுக்கும் மேலாக வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதும், தனக்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் சந்ததியர்களுக்கு தனது சற்றே தொங்கலான உருவம் தெரிய கடுகளவும் வாய்ப்பே இல்லை என்றறியும் தொலைநோக்கு பார்வையை கொண்டவர்,

ஆனால் இதெல்லாம் யாரும் யோசிக்காமல் அவர் கள்ளம் கபடமில்லாமல் புரியும் சின்ன விஷயங்களை மட்டும் பெரிதுபடுத்தி விடுவார்கள்.போற்றிபாடி பரிசு பெற வந்த கவிஞர் பாணபத்திர ஓணான்டியை பார்த்து "என்னை எதற்காகடா திட்டினாய்" என்று கேட்கும் போது  ஒரு நர்ஸரி ஸ்கூல் சிறுவன் "என்னோட கலர் பென்சில  ஏன்டா ஒடச்ச" என்று தனது அழுகையை அடக்கியபடி கேட்கும் தொனியைத்தான் உற்று உற்று கவனித்திருப்பீர்கள்.

என்னுடைய அபிப்ராயத்தில் அவரது படங்களில் சந்தேகமின்றி இது முதல் இடம் பிடிக்கும் படம். உக்கிரபுத்திரன் பாத்திரம் செய்யும்போது கொஞ்சம் அதிகமாகவே கஷ்டபட்டிருப்பார்.என நினைகிறேன். ஏனென்றால் அதை பார்த்து யாரும் சிரித்து விடகூடாதில்லையா? ஆங்கிலேயரை பார்த்து ஒரு பஞ்ச் டயலாக் வேற


 '"ஸோ வாட் வி ஆர்  டொண்ட்டி தேர்ட் புலிகேசி"


கடைசியா என்னோட பேவரட். மாடிப்படியில் சறுக்கியபடியே வருவது.  படத்தின் தொடக்கத்திலேயே இந்த காட்சி வரும். அப்போ தொடங்கி படம் முடியும் வரை சிரித்தபடியே..........................


என்றைக்கு என் சினத்துக்கு ஆளாகி சின்னாபின்னமாக போகிறீர்களோ, என மாடிப்படிக்கு கீழே வந்ததும் லகுடபாண்டிகளை பார்த்து மிரட்டுவார். யாரோட மிரட்டலோ இன்று அவரே கொஞ்ச காலம் சின்னா பின்னமாகி இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார். புதிய படம் வெற்றிபெற்று அவரது மறுவரவு நல்லபடியாக அமைய வாழ்த்துவோம்