சனி, ஜூலை 16, 2016

என்னை அறிந்தால்.....

நிறுத்தத்தில் நிற்காமல்
சென்ற பேருந்தில்
ஏறுவதற்கு சிறிது தூரம்
ஓடவேண்டியதாயிற்று.
படியில் ஒரு கால் வைப்பதற்கு
மட்டுமே இடம் இருந்தது.

தொங்கியபடியே கொஞ்ச நேர பயணம்.
நிறுத்தங்களில் ஆட்கள் இறங்க
பேருந்தின் உள்ளேறினேன்  
முன்பின் அறிந்திராத
ஒரு நல்லவன் அவன்
இறங்கவேண்டிய இடம் வந்ததும்
இருக்கையை விட்டு எழுந்தான்.

அதுவரை அவனுக்கு
சொந்தமாயிருந்த இருக்கை
இப்போது எனக்கு சொந்தம்.
இடம் கிடைத்ததில் வந்த
ஆணவம் உடனே
உறக்கமாக உருமாறியது.

ஓட்டுநர்  திடீர் பிரேக்
அடிக்க  முன்பக்க இருக்கையில்
தலைமுட்டி தூக்கம் கலைந்த
போது பயணிகள் எல்லாரும்
இறங்கி விட்டிருந்தனர்.

பேருந்தில் இப்போது
நானும் நடத்துனரும்
ஓட்டுனரும் மட்டும்.
இடையில் எங்கோ 
நடத்துனரும் இறங்கிட 
அடுத்த நிறுத்தத்தில்
ஓட்டுனரும் இறங்கினார்.

இப்போது பேருந்தில் 
நான் மட்டும்.
ஆளரவமில்லாத இடத்தில்
ஒரு பேருந்தும் அதில்
கூட்டமாக நான் ஒருவனும்.
எங்கே சென்றுகொண்டு
இருந்தோம் என்று
யோசிக்கும் போது 
பேருந்தும் தெரியவில்லை
நான் மட்டுமே தெரிந்தேன்.

என்னை நானே அறிவதின்
ரகசியம் எவ்வளவு
சிந்தித்தும் பிடிபடாமல் போக
பேருந்தை விட்டு இறங்கி
நானும் வெளியேறினேன்.

செவ்வாய், ஜூலை 12, 2016

நான் கவிஞனுமில்லை

விவரமில்லாதவனின்
எழுத்துக்களில் விஷயம்
எதுவும் இருக்காது.
அது கலங்கிய
குட்டையைப் போல 
அப்படியும் இப்படியும்
அலைபாய்ந்தபடி இருக்கும்.
சலனம் நின்றபோதுகண்ட
வடிவத்தைக் ஒரு
ஆர்வக் கோளாறில்
கவி(தை)தா…..ன்னு  
கூப்பிட்டு பார்த்தேன்.
போடா “……….”ன்னு
”பீப்” வார்த்தைல
திட்டிடுச்சு

ஞாயிறு, ஜூன் 26, 2016

பேனா முனை

கண்முன்னே ஒரு கொடுமை
நடக்கையில் அவன்
தீவிரவாதியாய் மாறிடுவான்.
வெடிகுண்டுகள் வீசி பலரை
பலிவாங்கி இருக்கிறான்.
கைது செய்து நீதிமன்றத்தால்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
இப்போது சிறையில் இருக்கிறான்.
தாய்மொழியில் பேச மனுகொடுத்தது
பரிசீலனையில் உள்ளது.
கருணை இருந்தால் சிலசமயம்
அந்த உரிமை கிடைக்கலாம்.
இருந்தாலும் அவன் பேசுவதற்கு
தாய்மொழியில் இப்போது
வார்த்தைகள் ரொம்பவும் குறைவு.
அதிலும் பாக்கியிருப்பதில் அதிகமுள்ளது
நிமிர்ந்து உட்காரச் சொன்னால்
துவண்டு படுத்துவிடும் வார்த்தைகளே
பேசுவதை கேட்கின்றவன்
உணர்ச்சியடைந்தாலும்
கண்ணை உருட்டி
மிரட்டல் பார்வை பார்த்தாலே
பயத்தில் உச்சா போயிடுறான். 

இரவு

இரவுகளின் பக்கங்கள்
மிகவும் கூர்மையானவை.
பகல் பொழுதுகளையெல்லாம்
அது பல துண்டுகளாக
வெட்டித் தள்ளுகின்றது

பல்வேறு வடிவங்களில்
பல்வேறு அளவுகளில்
பல்வேறு கோணங்களில்

அர்த்தமுள்ள துண்டுகளாக
அர்த்தமில்லா துண்டுகளாக
அர்த்தங்களே வேண்டாத துண்டுகளாக

வெட்டி முறித்து வீசுகின்றது   


வெள்ளி, ஜூன் 03, 2016

முகமது அ(ஞ்ச)லி




பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல சப்தமின்றி துள்ளிக் குதிக்கும் கால்கள்
தேனீ கொட்டுகின்ற வேகத்தில் மின்னலென குத்துக்கள் பொழியும் கைகள் 
கொண்ட மாவீரன் கடைசியில் தன் கல்லறையில் எழுதச் சொன்ன 
வாசகம் என்ன தெரியுமா...?




"ஒன்று, இரண்டு, மூன்று,…… பத்து…. என இப்போது எண்ணிக் கொள்ளுங்கள்...
நான் எழுந்திருக்க போவதில்லை".








படங்கள் உதவி : கூகுள் 

திங்கள், மே 30, 2016

விளம்பரம்

நிறைக்குடம் தளும்பாது..!!!  

(கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

1. குடத்தை யாரும் தொடக்கூடாது.
2. குடத்தை சமதளமுள்ள தரையில் அசையாமல் வைக்க வேண்டும்.
3. குடத்தில் மேற்கொண்டு நீர் ஏதும் ஊற்றக்கூடாது.
4. குடத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது.
5. குடத்தை வைத்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படக்கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலும், வேறு ஏதாவது காரணத்தினால் எதிர்பாராத விதமாக குடம் தளும்பினால் அதற்கு இந்த பழமொழியை உருவாக்கியவர் எந்த வகையிலும் பொறுப்பில்லை
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!