திங்கள், மே 12, 2014

மனைவிக்கு மரியாதை

நம் வாழ்க்கையில் பதின்ம வயது பருவம் ரொம்ப சங்கடமான ஒன்று. அலைபாயும் மனதை கட்டுபடுத்தி சரியான முடிவுகள் ரொம்ப கடினம். அது போன்றதுதுதான் நாற்பதின்ம வயதும். நாற்பது வயசு நாய் வயசு என்று எங்கோ படித்த ஞாபகம். குடும்பத்தலைவரின் பொறுப்புகளும் கடமைகளும் அதிகரித்து சதா மனசு பன்முக சிந்தனையுடன் முடிவெடுக்க திணறும் காலம். மேலும் இயற்கையாக இந்த பருவத்தில் ரொம்ப தொந்தரவா வீட்டம்மா அடிக்கடி கேட்கத் தொடங்கும் கோடாரிக் கேள்விகள். ஆனா உங்களுக்கிடையே நிலவும் அன்பும் அன்யோன்யமும்தான் இந்த கேள்விக்கணைகளில் பிரதிபலிக்கும். ஆபீஸ் வேலை, அது இதுன்னு ஏதோ யோசனையில் இருந்தபடி அதற்கு பதில் சொன்னா மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். பத்திரிக்கையில் நாம் படிக்கும் கணவன் மனைவி ஜோக்ஸ் நம்ம வீட்டில் உண்மையான மாதிரி ஆயிடும். இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதான்னா............"கண்டிப்பா கிடையாது". வேணும்னா நாம பள்ளி / கல்லூரி படித்துக்  கொண்டிருந்த போது தேர்வு நெருங்கும் சமயங்களில் தேர்ந்தெடுத்த முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை மட்டும் மீண்டும் ஒருமுறை திரும்ப படித்து வைத்துக் கொள்வதுபோல் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரிந்து வைத்து கொள்ளலாம்.   
இனி உங்களது வாழ்க்கை துணைவியிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான இந்த 5 அதிரடி கேள்விகளை மட்டும் அலசுவோம். இந்த கேள்விகளுக்கு நீங்கள் சமயோசிதமாக பதில் சொல்லாவிடில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதோ அந்த 5 வில்லங்கமான கேள்விகள்

1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?
2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?
3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?
4. அவள் என்னவிட அழகா இருக்காளா?
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

எச்சரிக்கை. மேலே நீங்கள் படித்த கேள்விகள் அனைத்தும் இரண்டு பக்கமும் கூர்த்தீட்டபட்ட கத்திகள். தவறான அல்லது கவனக்குறைவான உங்களது
பதில்களால் ரத்தகாயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் நன்றாக
யோசித்து பதில் சொல்லவும். நாம வாழ்வது சிலகாலம். அதை நல்லபடியாக தமது துணைவியருடன் வாழ்ந்து விட்டு போயிடலாம்னு ஆசை உள்ள எல்லாவரும் இந்த கேள்விக்கான பதில்களை சுயபரிசோதனை செய்து தெரிந்து வைத்துக்கொள்ளவும்.

1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?

இதற்கான உசிதமான பதில்: "ஒண்ணுமில்ல செல்லம், இவ்வளவு இலட்சுமிகரமான, ஐஸ்வர்யமான, மங்களகரமான நீ எனக்கு மனைவியா அமைஞ்சது எவ்வளவு அதிர்ஷ்டம்னு நெனைச்சிட்டிருந்தேன்'. ரொம்ப எளிமையாகவும் அதே சமயம் நச்சுன்னு சொன்ன மாதிரியுமான பதிலிது. அடுத்த வீட்டில் இருக்கும் லட்சுமியையோ, ஐஸ்வர்யாவையோ, மங்களத்தையோ நீங்கள் நினைத்துகொண்டிருக்கும் போது இந்த கேள்வி வந்தாலும் கூட பதில் சொல்வது எளிது. உலகெங்கும் உள்ள கணவர்கள் 
மிக அதிகமாக சொல்லி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பதில் இது.

2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?

"இல்லையா பின்ன?", என்று சொல்லலாம். கூடவே மானே, தேனே, பொன்மானே, கண்ணே, உயிரே, இதயமே, என்றெல்ல்லாம் சேர்த்து போட்டு சொன்னா இன்னும் நல்ல பலன் கொடுக்கும். "தங்கமே" என்று சொல்றது நல்லதுதான் ஆனா இப்பல்லாம் நகைக்கடைப் பக்கம் நாம் திரும்பி பார்ப்பதே இல்லை என்பதால் அதை கவனத்துடன் உபயோகிக்கவும். எக்காரணம் கொண்டும் கீழ்கண்ட பதில்கள் வாய்தவறியும் சொல்லாமல் இருக்க தீவிர பயிற்சி எடுத்து கொள்ளவும்.
 
"அப்பிடித்தான்னு நெனைக்கிறேன்"
"ஆமான்னு சொன்னா உனக்கு சந்தோஷமா?"
"ஏன் கேட்கிற?"
"நானா?"

3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?

"இந்த கேள்விக்கு அதிகபட்ச தைரியத்துடன் பதற்றப்படாமல் "இல்லை' என்று சொல்லவும். சொல்லி முடித்த உடனே ஒரிரு முறை நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு விட்டால் உங்கள் 
ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

தவிர்க்க வேண்டிய பதில்கள்.

"ரொம்ப குண்டும் இல்லை. ரொம்ப ஒல்லியாவும் இல்லை."
"யார்கூட கம்பேர் பண்ணுறப்போ?"
"உன் வயசுக்கு கொஞ்சம் அதிகம்தான்"
"உன்னவிட குண்டா நெறையபேர் இருக்காங்க. கவலைப்படாத."

4. அவள் என்னவிட அழகா இருக்காளா?

இது அவளிடம் நீங்கள் உளறிகொட்டிய உங்களது பழைய காதலியை பற்றியதாகவோ, சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகியை பற்றியதாகவோ அல்லது அவளுடன்  நீங்கள் வெளியே செல்லும்போது வழியில் வைத்து பார்த்து ஜொள்ளுவிட்ட ஒரு ஜிகிடியை பற்றியதாகவோ இருக்கலாம். 
இதற்கு ஒரு பாதுக்காப்பான பதில் "இல்லவே இல்லை. நீதான் அவளைவிட அழகு"

தவறுதலான பதில்கள் 

"அவ அழகா இருந்தா என்ன? அசிங்கமா இருந்தா என்ன?"
"அவ சின்ன வயசு, அதோட கொஞ்சம் வெள்ளையா, ஸ்லிம்மா இருக்கா"
"ஆனா அழகு மனசில தானே இருக்கு"
 
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

சரியான பதில், "என் கண்ணே, நீ என்ன விட்டு போயிட்டா நான் ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க மாட்டேன். அடுத்த லோக்கல் ரயில் வண்டி வரதுக்கு முன்னால தண்டவாளத்துல என் தலையை வச்சிடுவேன்".

முன்னெச்சரிக்கை இல்லாத பதிலால் கீழே சொல்லிய ஒரு பழைய கதையின்படி 
நடக்கவும் வாய்ப்பு உண்டு 

"என்னங்க, நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?"
"என்ன கேள்வி இது? நான் ரொம்ப கவலைப்படுவேன்"
"நீங்க வேற கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"
"என்ன பேசற? அதெல்லாம் செய்ய மாட்டேன்"
"ஏன் கல்யாண வாழ்க்கை சலிச்சு போச்சா?"
"அப்படியெல்லாம் இல்லை" (கொஞ்சம் யோசிச்சபடி)ஒருவேளை செய்ய வேண்டியிருக்கலாம்"
"செய்வீங்களா....?"
"ஆமா"
"செஞ்சுட்டு அவகூட இந்த வீட்டிலேயே தங்குவீங்களா?"
"தங்காம, வேற எங்க போறது?"
"நானும் நீங்களும் சேர்ந்து இருக்கிற போட்டோவ கழட்டி வச்சிட்டு அவளும் நீங்களும் 
சேர்ந்து இருக்கிற போட்டோவ மாட்டி வைப்பீங்களா?"
"ஆமா அதுதானே சரி"
"என்னோட தங்க நகைகள், துணிமணிகள் எல்லாத்தையும் அவள் எடுத்துக்குவாளா?"
"துணிமணிகள் எடுக்கமாட்டான்னு நெனைக்கிறேன். அவ சுடிதார் எல்லாம் போடறதில்லை" 

வாய்பேச முடியாத ஊமைகளிடமும், காது கேட்காத செவிடர்கள் மீதும் நாம் பொறாமை கொள்ளும் தருணங்கள் இவை.

கடைசியா ஒரு பஞ்ச்

தான் செய்தது சரியில்லை என்றால் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே சத்தியசீலன்.
தான் செய்தது சரியா தப்பான்னு அறுதியிட்டு உறுதிபடுத்திக்  கொள்பவனே ஞானி.
தான் செய்தது சரியாக இருந்தாலும் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே நல்ல கணவன்   

5 கருத்துகள்:

  1. ஹிஹிஹி.... நான் ஏற்கெனவே நல்ல கணவன்தாங்க...!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், கோவை ஆவியின் பதிவில் உங்களுடைய பின்னூட்டத்தைக் கண்டு இங்கு வந்தேன்...

    ஹா ஹா... செம பன்ச்... இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு எல்லாருமே சரியான பதிலைத்தான் சொல்வார்களா? நான் மாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே,,,, நீங்கள் எழுதியதை படித்ததில், நீங்கள் இன்னும் நாற்பதின்ம வயதை எட்டவில்லை என தோன்றுகின்றது

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது