ஞாயிறு, டிசம்பர் 08, 2013

வ(ப)டிவேலு




வடிவேலு மீண்டு(ம்) நடிக்க வந்திருக்கார். அவரது புதிய படம் பொங்கலுக்கு வருதாம். நியூஸ் படித்தேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. இருக்காதா பின்னே?...எவ்வளவு நல்ல நகைச்சுவை நடிகர். படத்துக்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலக்குவாரே....ரொம்ப நாள் கழித்து ஒரு படம் வரப்போகுது. அட யாரப்பா அது "வரூ...........ம்..........ஆனா வராது"......ன்னு அவரோட காமெடி டயலாக்கயே இழுக்கறது. கண்டிப்பா வரும் நம்புங்கப்பா.

இவரை எப்படி என் வலைபூச்சரத்தில் இடம் பெற செய்வது என்று சிந்தித்தபடியே கழிவறையில் நான் அமர்ந்திருக்கும் பொது கண நேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த பதிவு யோசனை. எப்படி என் ராஜதந்திரம்.

வடிவேலு நடித்த ஒரு படத்தை பற்றிய ஒரு பதிவு இது. என்ன படம் என்று மேலே கொடுத்துள்ள க்ளூவை வைத்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பரிசு.


உங்கள்  ஊகம் சரிதான். படத்தின் பெயர் இம்சை அரசன் 23ம் புலிகேசி. படம் வந்த நாள் முதல் இந்த நாள் வரை பலமுறை பார்த்த படம் என்றாலும் பதிவு எழுதுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பொதுவா இவரோட காமெடி எல்லாமே சூப்பரா இருக்கும். இந்த படத்தில பட்டய கெளப்பும்.

கமண்டலத்தையும் கும்பாவையும் வழியிலே வைத்த பூசாரியை திட்டுவதில்  தொடங்கி வரிசையாக ராஜகுலோ..........த்துங்குவை விட்ட வாயிற்காவலன், கத்தியை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்த மங்குனி அமைச்சர், மேலே பராக்கு பார்த்தபடி நின்றதால் கைநழுவிப்போக இருந்த பீற்றிக்கொள்ளதக்க அரசாங்க உத்தியோகம் பார்க்கும் காவலாளி, அக்காமாலா மற்றும் கப்ஸி குளிர்பான செய்முறைகளை ஒட்டுக்கேட்டு வாந்தி எடுப்பவன், தங்கக் கிணறு மெகா ப்ரொஜெக்டில் நின்றபடியே உறங்குபவன் மற்றும் எல்லா லகுட பாண்டிகளுக்கும் சரமாரியாக வழங்கும் மூக்குபொடி தண்டனை, மிளகாய் பொடி தண்டனை, மொட்டை மாடி வெயிலில் அம்மணமாக நிறுத்துதல், மீசையை மூக்கில் விட்டு மூளையை குழைத்து விடும் தண்டனை போன்ற மிகவும் அபாயகரமான (?.) மற்றும் உடனடி தண்டனைகள்.




இவையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் உடனே இந்த புலிகேசி மன்னர் விவரமில்லாதவர் என்று முடிவுசெய்து விடாதீர். ஏனெனில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் பற்றி மிக தெளிவாக அறிந்தவர், மண்டைக்கு மேல் முடி இருந்தால் போதாது மதி வேண்டும் என்ற விவேகம் தெரிந்தவர்,அரண்மனை வாசல்வரை வந்துவிட்ட மிகப்பெரிய போரை தனது சாமர்த்தியத்தால் நிறுத்தி சமாதான வெள்ளை கோடிக்கு புதிய அர்த்தம் கொடுத்தவர். சிறையில் தன் கையை கட்டி இருப்பது போர்க்கருவிகள் செய்யும் கொல்லன் செய்த சங்கிலி என்ற உண்மை அறிந்ததும் அதை அனாயசமாக அறுத்து வீசும் பலம் பொருந்தியவர்.



எல்லாவற்றுக்கும் மேலாக வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதும், தனக்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் சந்ததியர்களுக்கு தனது சற்றே தொங்கலான உருவம் தெரிய கடுகளவும் வாய்ப்பே இல்லை என்றறியும் தொலைநோக்கு பார்வையை கொண்டவர்,

ஆனால் இதெல்லாம் யாரும் யோசிக்காமல் அவர் கள்ளம் கபடமில்லாமல் புரியும் சின்ன விஷயங்களை மட்டும் பெரிதுபடுத்தி விடுவார்கள்.போற்றிபாடி பரிசு பெற வந்த கவிஞர் பாணபத்திர ஓணான்டியை பார்த்து "என்னை எதற்காகடா திட்டினாய்" என்று கேட்கும் போது  ஒரு நர்ஸரி ஸ்கூல் சிறுவன் "என்னோட கலர் பென்சில  ஏன்டா ஒடச்ச" என்று தனது அழுகையை அடக்கியபடி கேட்கும் தொனியைத்தான் உற்று உற்று கவனித்திருப்பீர்கள்.

என்னுடைய அபிப்ராயத்தில் அவரது படங்களில் சந்தேகமின்றி இது முதல் இடம் பிடிக்கும் படம். உக்கிரபுத்திரன் பாத்திரம் செய்யும்போது கொஞ்சம் அதிகமாகவே கஷ்டபட்டிருப்பார்.என நினைகிறேன். ஏனென்றால் அதை பார்த்து யாரும் சிரித்து விடகூடாதில்லையா? ஆங்கிலேயரை பார்த்து ஒரு பஞ்ச் டயலாக் வேற


 '"ஸோ வாட் வி ஆர்  டொண்ட்டி தேர்ட் புலிகேசி"


கடைசியா என்னோட பேவரட். மாடிப்படியில் சறுக்கியபடியே வருவது.  படத்தின் தொடக்கத்திலேயே இந்த காட்சி வரும். அப்போ தொடங்கி படம் முடியும் வரை சிரித்தபடியே..........................


என்றைக்கு என் சினத்துக்கு ஆளாகி சின்னாபின்னமாக போகிறீர்களோ, என மாடிப்படிக்கு கீழே வந்ததும் லகுடபாண்டிகளை பார்த்து மிரட்டுவார். யாரோட மிரட்டலோ இன்று அவரே கொஞ்ச காலம் சின்னா பின்னமாகி இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார். புதிய படம் வெற்றிபெற்று அவரது மறுவரவு நல்லபடியாக அமைய வாழ்த்துவோம்  

2 கருத்துகள்:

  1. படம் பார்க்கவில்லை. நிஜமாகவே சரித்திரக் கதைப் படமா !!

    பதிலளிநீக்கு
  2. இது ஒரு நகைச்சுவையான கற்பனை சரித்திரம். உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பார்க்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் ஒன்றும் இல்லை. அந்த காலத்து உத்தமப்புத்திரன் படத்தின் ரீமிக்ஸ்தான். என்றாலும் இந்த படத்தில் வரும் வசனங்களிலிருந்து உங்களுக்கு பதிவுகள் எழுதும்போது நகைச்சுவைக் கலக்கும் இடங்களின் சொற்பிரயோகங்களுக்கு சில வார்த்தைகள் கிட்டலாம். "பொன்"னல்லாத நேரம் கிடைத்தால் மட்டும் பாருங்க

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது