செவ்வாய், மார்ச் 18, 2014

மாடிப்படி வாஸ்து

எனக்கு வாஸ்து சாஸ்திரம் என்ற வஸ்துவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது மாடிப்படி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் என்பதாலும் இந்த பதிவு.
 
 
 
இப்போது கட்டும் வீடுகள் பெரும்பாலும் அடுக்குமாடிகள் என்பதால் மாடிப்படிகள் முக்கியத்துவம் பெறுகிறது. மாடிப்படிகள் பல்வேறு வடிவங்களிலும், சிமெண்ட், இரும்பு அல்லது மரத்திலான படிகளாகவும் கட்டப்படுகிறது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மாடிப்படியின் அமைப்பு வாஸ்து சாஸ்திர அமைப்புடன் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.  
 
 
மாடிப்படிகள் ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நிர்ணயம் செய்கின்றது என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா..?
 
 
சீன வாஸ்து சாஸ்திரம் பெங் சுயி நிபுணர்களின் கருத்துப்படி மாடிப்படிகள் வீட்டின் வாஸ்து தோஷத்தை கொடுப்பதில் / நீக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
  

மாடிப்படிகள் எப்போதும் வீட்டின் மேற்கு திசையிலும் தெற்கு திசையிலும் மட்டுமே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மாடிப்படிகள் அமைப்பது தோஷமாக மாறி உங்களுக்கு பண நஷ்டங்கள் ஏற்படுத்தி விடலாம்.

மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் "0" என முடியும் எண்ணிக்கையில் அதாவது10, 20, 30 என இருக்கக்கூடாது  

சுழல் மாடிப்படிகள் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கலாம் என்பதால் தவிர்க்கவும் 

உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்.


மாடிபடிக்கு கீழே குளியலறையோ, சமையலறையோ அல்லது பூஜை அறையோ அமைக்க கூடாது.



வீட்டின் நடுவே மாடிப்படி வைப்பது சரியானதல்ல என்றாலும் அதனால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறு வைக்கும் மாடிப்படியில் சரியான வளைவுகள் இல்லையென்றால் விபரீதமான பலன்களை கொடுக்கும். மாடிபடிகளுக்கு மேற்புறம் மின்விளக்கு அமைப்பதும் கூடாது.

 



 

புதன், மார்ச் 12, 2014

பாசவலை

ஆதரவின்மை என்ற துன்பச் சிறையுண்டு
அதனைக்கண்டு கலங்கும் மனமுண்டு 
கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கும்போது
கொஞ்சமாவது கண்கலங்க தோன்றுகின்றது 
துக்கம் புயலென தாக்கும்போது 
நெஞ்சு விம்மி வலிக்கின்றது.
நினைவுகளில் மட்டுமே இனி என்பதை மறந்து 
திரும்பிவர எத்தனிக்கையில் 
கொழுந்துவிட்டு எரியும் தீ தடுக்கின்றது 
மறந்திடுவாயோ என்றெண்ணும்போது 
உடலைவிட அதிகமாய் உள்ளம் தகிக்கின்றது
விட்டுச்செல்லும் உறவுகள்
தீர்ந்து போன சோகங்கள்
அடுத்த ஜென்மத்திலாவது 
எதுவும் அறியாமல் எதற்கும் ஆசைபடாமல்
சொந்தங்களின் பந்தச்சிறையில்
அகபட்டுக்கொள்ளாமல் இருக்க 
எதையும் தாங்கும் இதயமொன்று கொடுத்தருள் இறைவா
என்பதே சாம்பலாய் மாறும்வரை 
இருக்கும் மிச்சநேர பிரார்த்தனை
என்னதான் இருக்கட்டுமே
மண்குடத்திலிருந்து நீரில் விழுந்து 
கலந்து சங்கமிக்கும் போதுதான் அமைதி 
இல்லையென்றால் அடங்காத அந்த பாசம் 
இந்த சாம்பலை உயிர்த்தெழ செய்தாலும் செய்திடும்  

 

கேள்விக்கென்ன பதில்?

உங்களிடம் ஒரு குழப்பமான கேள்வி கேட்கட்டுமா..................?

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். உங்கள் குழப்பத்தை குறைத்திட உதவியா அவங்க பெயர் ராமு, சோமு, பாலு என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் ராமு பிறவியிலேயே பார்வையற்றவன்.சோமுவுக்கு சுத்தமா காது கேட்காது. மூன்றாமவன் பாலு பிறவி ஊமை.
 
மூணு பேரும்  சேர்ந்து வியாபாரம் பண்ணி நல்லா சம்பாதிச்சு ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குருடன் ராமு சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அவனுக்கு தெரியாம (??) திருடிக்கொண்டு செவிடன் சோமு எஸ்கேப் ஆகுறான்.  
ஏதேச்சையா அந்தப்பக்கம் வந்த பாலு (ஊமை) இதை பார்த்துட்டான். சைகை காட்டி கூப்பிட்டு உதவி கேட்க பக்கத்தில வேற யாருமே இல்லாத காரணத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் எப்படி தன் நண்பன் ராமுவுக்கு பணப்பை திருடு போன விஷயத்தை சொல்லுவான்? இதுதான் அந்த கேள்வி.
 
இதே கதை கொஞ்சம் பெரிய, சிறிய வித்தியாசங்களுடன் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் கேள்வி  மட்டும் பொதுவானது. பிறவியிலேயே வாய்பேச முடியாத ஒருவர் எப்படி ஒரு குருடனிடம் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பான்?
 
மிகச்சரியான விடைதான் வேண்டும் என்று கேட்கவில்லை. கண்டிப்பாக பல விடைகள் கிடைக்கலாம். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் வேறு கருவிகளை உபயோகிக்காமல் ஊமையான பாலு தன் நண்பனுக்கு உதவ முடியுமா? என்பதுதான் என் கேள்வி!
 
இந்த கேள்விக்கு என்னவெல்லாம் பதிலாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

வெற்றிப்படிகட்டு




நிறமற்ற ஓர்  இரகசிய உலகிற்கு போக 
வழி சொல்கிறேன் கவனமா கேட்டுக்கொள்.
இந்த மாடிப்படியில் வழியாக ஏறிச்செல் 
இதன் சூனியங்களில் உன் கால்தடங்கள் பதிவதில்லை 
ஓசைகளும் இரைச்சலும் கேட்பதில்லை.
அங்கு தொண்டையை  அடைக்கும் சோகங்களில்லை. 
எப்போதும் சந்தோஷமும் சிரிப்பும் மட்டுமே.
கூடவே நீ ஆசைப்பட்ட அமைதியும் நிம்மதியும் 
இதுநாள் வரை உன்னை ஏமாற்றிக்  கொண்டிருந்த 
அர்த்தமில்லாத வார்த்தைகளும்  
வாக்குறுதிகளும் இங்கு இல்லை
இந்த மாடிப்படிகளுக்குக் இருட்டின் நிறம் 
பட்டப்பகலில் வெளிச்சம் அள்ளி வீசும் கதிரவனோ 
நட்டநடு இரவில் பாலொளி வீசும் சந்திரனோ 
இந்த மாடிப்படியில் கால் வைத்ததில்லை.
தன்னிலேயே துவங்கி தன்னிலேயே முடிந்திடும்
ஒரு கோளமாக உன்னை மாற்றிக் கொண்டு  
இந்த மாடிப்படிகளில் உருண்டு செல் - அல்லது  .
அதிலிருந்தே பறந்து அதிலேயே கலந்துவிடும் 
புகையாய் உன்னை மாற்றிக் கொண்டு 
இந்த மாடிப்படிகளில் தவழ்ந்து செல்.
ஆனால் படி ஏறிச்செல்லும் களைப்பில் 
ஓய்வெடுக்க அதிக நேரம் அமர்ந்து விடாதே.
அதன் இருட்டு உன் கண்களின் வழியே ஊடுருவி 
உன் இருதயத்தில் நுழைந்து 
உன் இரத்த நாளங்களில் கலந்துவிடும்.
இந்த மாடிப்படி ஒரு  கருவி மட்டுமே.
அதைக் கடந்ததும் காண்பாய் நிறமற்ற மணமற்ற ஒரு உலகம் 
உனக்கு மட்டும் சொந்தமான ஒரு உலகம் - அங்கு 
உன் கால்களை பூட்டிய முயலாமை விலங்கு அறுந்துவிழும்
உன் கைகளை கட்டியிருந்த இயலாமை கயிறுகள் விலகும்
உன்  கண்ணை மூடியிருந்த அறியாமை கருந்துணி அவிழும்  
கண்ணீரையும், ஏளன சிரிப்பையும், வஞ்சனைகளையும்,
இரத்த காயங்களையும், வலிகளையும் படிகளாய் கொண்ட   
இந்த மாடிப்படிகளில் மூச்சைப்பிடித்து ஏறிச்செல்.
சோர்ந்துபோகாமல் நீள உயரங்கள் பாராமல் 
இன்றே நீ நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
நாளைக்கு நீ சுதந்திர மனிதன் 


நானொரு பைத்தியம்.....தேவை வைத்தியம்


ஒருமுறை ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினேன். எல்லாவரும் என்னை பரிகாசம் செய்தனர்."இவனுக்கென்ன கிறுக்கா ?...வேலியில  போற ஓணான எடுத்து வேட்டியில விட்டுக்கிறானே......"என்றனர். 
.
பின்னொரு முறை நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யுங்கள் என சொன்ன போது எல்லோரும், "இவன் பெரிய கிறுக்கனா இருப்பானோ? தேவை இல்லாத உபதேசமெல்லாம் கொடுக்கறானே" என்றனர். 

பின்னொரு முறை பசியோடு அலைந்து கொண்டிருந்த ஒரு பிச்சைகாரனுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுத்தேன். எல்லோரும், "இவனுக்கு என்ன மறை கழன்று விட்டதோ? கண்ட கண்ட பொறுக்கி பயலுகளுகெல்லாம் அன்னதானம் பண்ணுரானே" என்றனர்.

பின்னொரு முறை ஒரு அனாதை  ஆசிரமத்திற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தேன். எல்லோரும் "நிச்சயமா இவனுக்கு பைத்தியம்தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராச்சும் இப்படி வீணாகக்குவங்களா? என்றனர்.

பின்னொரு முறை நான் செய்யும் சேவைகளை பிடிக்காத ஒருவன் என்னை தாக்க வந்தபோது நான் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தேன். அவன் மீண்டும் வீண் வம்பு வளர்த்து என்னை அடித்து நொறுக்கினான்.ஆனால் நான் அவனை திருப்பி அடிக்கவில்லை. எல்லோரும் "இவன் சரியான பொட்டப்பயலா இருக்கானே. அடிக்கிறவன திருப்பி அடிக்க வேண்டியதுதானே" என்றனர்.

எனக்குள்ளே பழிவாங்கும் எண்ணம் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியதொடங்கியது. கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்து என்னை அடித்தவன் கதையை முடித்தேன். இல்லை இல்லை. முடிக்க வைத்தேன். எல்லோரும் "அவன் சிங்கம்டா....கில்லாடிடா..." என்றனர்.

இந்தமுறை எனக்கே தோன்றியது, எனக்கு பைத்தியம் என்று. "ஆமாம் ஆமாம் நான் பைத்தியக்காரன்தான்“  


புதன், பிப்ரவரி 12, 2014

கொயந்த அயுவுது

சுருக்குகயிற்றின் முடி இறுகியது.அந்த வயோதிகனுக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை. இழுத்த இழுப்புக்கு நடக்க தொடங்கினார். உடலின் எடை குறைந்து கொண்டே வருவது போல் தோன்றியது. நெடுநாட்களாக தொல்லைகொடுத்துக்  கொண்டிருந்த எல்லா நோய்களும் தீர்ந்து சட்டென்று சுகமானது போல தோன்றியது. கழுத்தில இருந்த கயிறும் அதை இழுத்துகொண்டிருந்த ஆளையும் திடீரென காணவில்லை. 

சிந்தனை செய்தபடி இருக்கும்போதே அவரது உரோமங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து காற்றில் பறக்க  தொடங்கியது  அவர் உடல் சிறியதாகிக்கொண்டே சென்றது.உருவம் சுருங்கி சுருங்கி ஒரு அணுவின் அளவினை அடைந்தது. சுருண்டு நெளிந்த அவரை யாரோ போர்த்தி மூடினர். சறுக்கு மரத்தில் வழுக்கி வீழ்வதுபோல் ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்தார். எவ்வளவு நேரம் தூங்கினார் என்றே அவருக்கு தெரியவில்லை.எங்கும் ஒரே இருட்டு. இருட்டு மட்டும்.

கண்விழித்தபோது தூரத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சம். அந்த வெளிச்சத்தை நோக்கி யாரோ வேகமாக தள்ளி விட்டது போல் தோன்றியது.வேகமாக முன்னேறி சென்றபடியே இருந்தார். 

அவரது எடை சிறிது கூடியிருந்தது. எங்கிருந்தோ யாரோ அழும் குரல் கேட்டது. தூரம் குறைய குறைய வெளிச்சத்தின் பிரகாசம் அதிகரித்தது. கூடவே அழுகையின் குரலும். அவர் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டார். 

அவரது நினைவுகள் மறைந்து மனது சூன்யமாகியது.  ஒன்றும் அறியாத அவஸ்தை, ஒன்றும் நினைவுக்கு வராத அவஸ்தை.  சட்டென யாரோ அவரை பிடித்து.இழுக்க இருட்டு எனும் போர்வைக்குள் இருந்து வெளிச்சத்திற்கு வந்து முடி நரைத்த ஒரு முதிய பெண்மணியின் கையில் வீழ்ந்த அவர் மீண்டும் ஒரு சிறிய  குழந்தையாய் மாறியிருந்தார். 

அற்புதமான  இந்த பூமியில் இன்னொரு பிறவியினை தந்த கடவுளுக்கு அவர் உரக்க உரக்கக்  கூவியபடி நன்றி கூறினார். ஆனால் கூடியிருந்தவர்கள் குழந்தை பாலுக்கு அழுவதாக நினைத்து கொண்டனர்.